ரயில்களில் கழிவு மேலாண்மை மேம்படுத்த இந்திய ரயில்வே புதிய திட்டம்; முழு விவரம்

எழுதியவர்: அனிஷ் மாண்டல்

ஜாான்சியில் உள்ள ‘வேகன் பழுதுபார்க்கும் பணிமனை’ இந்த புதிய அமைப்பின் மாதிரியை உருவாக்கியுள்ளது. குப்பைகளைச் சேமிக்கும் கொள்ளளவை அதிகரிக்கவும், ரயில் பெட்டிக்குள் இருக்கும் குப்பைத் தொட்டிகளை அடிக்கடி கையாளும் தேவைகளைக் குறைக்கவும் இந்த விநோத முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் படிக்க:

இது ஏன் முக்கியம்?

குப்பைத் தொட்டிகளின் குறைந்த கொள்ளளவு காரணமாக, நீண்ட தூரப் பயணங்களில் அவை நிரம்பி வழிந்து, பெட்டிகளுக்குள்ளும் ரயில் தண்டவாளங்களிலும் குப்பைகள் வீசப்படுவதற்கு வழிவகுக்கிறது.

தற்போதுள்ள கழிவு அகற்றும் முறையை மாற்ற ரயில்வே முயல்வது ஏன்?

எல்.ஹெச்.பி (LHB) ரயில் பெட்டிகளில் தற்போதுள்ள கழிவு அகற்றும் அமைப்பில், தலா 15-20 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு சாதாரண குப்பைத் தொட்டிகள் மட்டுமே உள்ளன.

குறுகிய தூரப் பயணங்களுக்கு இது போதுமானதாக இருந்தாலும், நீண்ட தூரப் பயணங்களில் குப்பைகள் தொடர்ந்து சேரும் போது இந்த அளவு போதுமானதாக இருப்பதில்லை. இதன் காரணமாகக் குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழிந்து, பயணிகள் அமரும் இடங்கள் அசுத்தமாகின்றன.

இந்த வரம்பைப் போக்கும் வகையில், சிறிய திறன் கொண்ட வழக்கமான தொட்டிகளிலிருந்து விடுபட்டு, மிகப்பெரிய சேமிப்பு அமைப்புக்கு மாற இந்த புதிய முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாற்றியமைக்கப்பட்ட கழிவு மேலாண்மை முறை எவ்வாறு செயல்படும்?

பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்த புதிய அமைப்பு மூன்று முக்கியப் பகுதிகளைக் கொண்டுள்ளது:

குப்பை போடும் பெட்டி 

இணைப்பு பகுதி (Connector)

பெட்டிக்கு அடியில் உள்ள கழிவு சேகரிப்பான்

பயணிகள் வழக்கம்போலக் குப்பைகளைக் கொட்டுவதற்கு ஏதுவாக, ரயில் பெட்டியின் தளத்தில் குப்பை போடும் பெட்டி அமைக்கப்பட்டிருக்கும். கேபின் தளத்திற்கும் கீழ் பகுதிக்கும் இடையே உள்ள இணைப்பி மூலம் குப்பைகள் கீழ்நோக்கிச் செல்லும்.

ஈர்ப்பு விசை அடிப்படையிலான இந்த அமைப்பின் மூலம், பயணிகள் கொட்டும் குப்பைகள் இந்த இணைப்பு குழாய்  வழியாகப் பெட்டியின் அடியில் பொருத்தப்பட்டுள்ள பெரிய சேகரிப்பானுக்குச் சென்றுவிடும். இதனால் பயணத்தின் போது குப்பைகளை தனியாகக் கையாளத் தேவையில்லை. ரயில் பராமரிப்பின் போது மட்டுமே இந்த அடியில் உள்ள சேகரிப்பானைக் காலி செய்ய முடியும்.

குப்பை சேமிப்பு திறன் பல மடங்கு உயர்வு

புதிய அமைப்பின் மிக முக்கியமான அம்சமே அதன் அதிகப்படியான சேமிப்புத் திறன் தான். தற்போதுள்ள அமைப்பில் 18 லிட்டர் மட்டுமே சேமிக்க முடியும் என்ற நிலையில், இந்த புதிய சேகரிப்பான் 367.4 லிட்டர் கொள்ளளவு கொண்டது என ஜான்சி பணிமனை தெரிவித்துள்ளது.

இந்த மிகப்பெரிய சேமிப்புத் திறன், நீண்ட பயணத்தின் போது தொடர்ந்து சேரும் குப்பைகளைக் கையாள உதவுவதோடு, தொட்டிகள் நிரம்பி வழிவதையும் முற்றிலும் தடுக்கும். மேலும், ரயில் பெட்டியின் கீழ் பகுதியில் உள்ள மற்ற பாகங்களுக்கு எந்த இடையூறும் இன்றி, காலியாக உள்ள இடத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வடிவமைப்பு மற்றும் சுலபமான சுகாதாரம்

இந்த அமைப்பு ‘ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்’ (Stainless steel) கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது துருப்பிடிக்காமல், அதிக பலத்துடன் நீண்ட காலம் உழைக்கும்.

அடியில் உள்ள கழிவு சேகரிப்பானை எளிதாகக் கழற்றிச் சுத்தம் செய்வதற்கு ஏதுவாக 3:10 என்ற சிறப்புச் சரிவு விகிதத்தில் (taper) இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தவும், சுகாதாரத்தைப் பேணவும் குப்பை பெட்டி மற்றும் சேகரிப்பான் ஆகிய இரண்டையும் இருபுறமிருந்தும் தனித்தனியாகச் சுத்தம் செய்ய முடியும்.

தண்டவாளங்களில் குப்பை வீசப்படுவதைக் குறைக்கும்

பெட்டிகளுக்குள் உள்ள தொட்டிகள் நிரம்பும்போது, பயணிகள் குப்பைகளை வெளியே வீசுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. அதிக கொள்ளளவு கொண்ட இந்த புதிய அமைப்பு மூலம் அந்தப் பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும்.

பயணிகளுக்குப் போதுமான சேமிப்பு வசதியை வழங்குவதன் மூலம், பெட்டிகளுக்குள் குப்பை சேருவதும், தண்டவாளங்களில் குப்பை வீசப்படுவதும் கணிசமாகக் குறையும்.

“இந்த மாற்றியமைக்கப்பட்ட கழிவு மேலாண்மை அமைப்பு ஒரு நடைமுறைக்கேற்ற, சிக்கனமான மற்றும் நிலையான முயற்சியாகும். சேமிப்புத் திறனை அதிகரிப்பதன் மூலம் சுத்தமான ரயில் பெட்டிகள், பயணிகளின் திருப்தி மற்றும் ஆரோக்கியமான ரயில்வே சூழலுக்கு இது நேரடியாகப் பங்களிக்கிறது” என்று ஜான்சி பணிமனை தெரிவித்துள்ளது.

Source link