ரஷ்யா – உக்ரைன் போர் தீவிரம்: ஒடேசா அருகே கப்பல் மீது தாக்குதல்; 4 இந்தியர்கள் உயிரிழப்பு – russia ukraine war escalates 4 indians killed in odesa ship attack

உக்ரைனின் ஒடேசா துறைமுகத்திலிருந்து தானியங்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட சரக்கு கப்பல் மீது ரஷ்யா நடத்தியதாக கூறப்படும் ஏவுகணை தாக்குதலில் 4 இந்தியர்கள் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே ஒரு இந்தியர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவத்தை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

ரஷ்யா – உக்ரைன் போர் நான்காவது ஆண்டை கடந்தும் முடிவுக்கு வராத நிலையில், அதன் தாக்கம் போர்க்களத்தைத் தாண்டி சர்வதேச கடல்சார் வர்த்தகத்தையும் நேரடியாக பாதித்து வருகிறது. அந்த வகையில், உக்ரைனின் ஒடேசா துறைமுகத்திலிருந்து தானியங்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 4 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் (MEA) வெளியிட்ட தகவலின்படி, 2026 ஜூலை 19 அன்று கினியா-பிசாவ் நாட்டுக் கொடி ஏந்திய MV Golden Leo என்ற சரக்கு கப்பல் ஒடேசா துறைமுகத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தாக்குதலுக்கு உள்ளானது. கப்பலில் மொத்தம் 17 பணியாளர்கள் இருந்த நிலையில், அவர்களில் 5 பேர் இந்தியர்கள். இதில் 4 பேர் உயிரிழந்ததுடன், ஒருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ரஷ்யா மீது உக்ரைன் குற்றச்சாட்டு

உக்ரைன் அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, ரஷ்யப் படைகள் குரூஸ் ஏவுகணைகள் மூலம் கப்பலை குறிவைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலால் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. மேலும், ஒடேசா துறைமுக வழிகாட்டி (Port Pilot) ஒருவரும் உயிரிழந்துள்ளார். காயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், இந்த தாக்குதல் தொடர்பாக ரஷ்யா இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கவில்லை.

இந்தியாவின் நடவடிக்கை என்ன?

இந்த சம்பவத்தை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும்,உக்ரைன்அதிகாரிகள் மற்றும் இந்திய தூதரகம் இணைந்து தேவையான உதவிகளை வழங்கி வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. காயமடைந்த இந்தியரின் உடல்நிலையும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கருங்கடல் வர்த்தகப் பாதையில் மீண்டும் பாதுகாப்பு கேள்வி

ஒடேசா துறைமுகம் , உலக நாடுகளுக்கு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய மையமாகும். ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கிய பிறகு கருங்கடல் வழித்தடத்தின் பாதுகாப்பு குறித்து பலமுறை சர்வதேச அளவில் கவலைகள் எழுந்துள்ளன. தானிய ஏற்றுமதியை பாதுகாப்பாக மேற்கொள்ள பல நாடுகள் முயற்சி எடுத்தாலும், சமீபத்திய தாக்குதல் வர்த்தகக் கப்பல்கள் கூட போரின் ஆபத்திலிருந்து தப்பவில்லை என்பதை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

இந்தியர்களின் பாதுகாப்பு மீதான கவலை

உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வணிகக் கப்பல்களில் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக மோதல் நிலவும் பகுதிகளில் பணியாற்றும் இந்திய கடலோடிகளின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளன. போர் நடைபெறும் பகுதிகளில்பயணிக்கும் கப்பல்களுக்கு கூடுதல் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை என கடல்சார் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஈரான் தாக்கிய முக்கிய இடம்! இந்தியா முன் உள்ள 2 முக்கிய பிரச்சனைகள்

சர்வதேச கவனத்தை ஈர்த்த சம்பவம்

இந்த தாக்குதல், ரஷ்யா – உக்ரைன் போரின் மனிதாபிமான தாக்கத்தை மீண்டும் உலகின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. போரால் இரு நாடுகள் மட்டுமல்லாமல், சர்வதேச வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் வெளிநாடுகளில் பணியாற்றும் பொதுமக்களின் உயிர்களும் பாதிக்கப்படுகின்றன என்பதற்கு இந்த சம்பவம் மற்றொரு எடுத்துக்காட்டாக மாறியுள்ளது. இந்தியர்களின் உயிரிழப்பு, போரின் விலை எல்லைகளைத் தாண்டி உலக நாடுகளையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதை வெளிப்படுத்தும் சோகமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

Source link