புதுடில்லி: ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரான ஹரிவன்ஷ் நாராயண் சிங், 69, ராஜ்யசபா துணை தலைவராக இருந்தார். இவரது எம்.பி., பதவிக்காலம், சமீபத்தில் நிறைவடைந்தது. இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு, நியமன எம்.பி.,யாக ஹரிவன்ஷ் நாராயண் சிங்கை கடந்த 10ம் தேதி நியமித்தார்.
மூத்த பத்திரிகையாளராக இருந்து அரசியல்வாதியான ஹரிவன்ஷ், ஏற்கனவே இரண்டு முறை பீஹார் மாநிலம் சார்பில் ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வான நிலையில், தற்போது மூன்றாவது முறையாக எம்.பி.,யாகி உள்ளார்.
முன்னதாக, ராஜ்யசபா முன்னவரும் பா.ஜ.,வின் மூத்த தலைவருமான நட்டா முன்மொழிந்த நிலையில், நாகாலாந்தின் பா.ஜ., எம்.பி., பாங்க்னான் கோன்யாக் வழிமொழிந்தார். இதையடுத்து, ஹரிவன்ஷை, ராஜ்யசபாவின் துணை தலைவராக தேர்ந்தெடுப்பதற்கான தீர்மானம் குரல் ஓட்டெடுப்பு மூலம் நேற்று நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து ராஜ்யசபாவின் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை சபை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் முறைப்படி அறிவித்தார். அதன்பின் பிரதமர் மோடி முன்னிலையில் சபை முன்னவர் நட்டா, எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் துணை தலைவருக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைக்கு ஹரிவன்ஷை அழைத்து சென்றனர்.
