ராணிப்பேட்டை: இளம்பெண் பாலியல் வன்கொடுமை; 3 இளைஞர்களுக்குக் கடுங்காவலுடன் கூடிய ஆயுள் தண்டனை!

ராணிப்பேட்டையில், பாலாறு – பொன்னை ஆறு சங்கமிக்கும் படுகையையொட்டி, ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கிறது `நவ்லாக்’ அரசுப் பண்ணை (State Horticulture Farm – Navlock). நவாப் ஆட்சிக்காலத்தில், பழவகைககள் உட்பட 9 லட்சம் பயன் தரும் மரங்களுடன் இந்தப் பண்ணை உருவாக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளப்பட்ட நவ்லாக் பண்ணை மேல்பண்ணை, நடுப்பண்ணை, கீழ்ப்பண்ணை என மூன்று வகையாகப் பிரித்து, பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், போதிய பாதுகாப்போ, முறையான பராமரிப்போ இல்லாத காரணத்தால், தனது அடையாளத்தையே இழந்து உருக்குலைந்து கிடக்கிறது நவ்லாக் பண்ணை. இதனால், அங்கு போதை கும்பல்களின் நடமாட்டம் அதிகரித்து, குற்றப் பின்னணி கொண்ட மர்ம நபர்களின் அட்டகாசமும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

சித்தரிக்கப்பட்ட படம்

இந்த நிலையில்தான் கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ம் தேதி இரவு 10.30 மணியளவில், தென்னை ஒட்டு மையம் செயல்படும் நடுப்பண்ணை பகுதி வழியாக பைக்கில் வீடு திரும்பிய இளம் காதல் ஜோடி, புதர் ஓரமாக பைக்கை நிறுத்திவிட்டு தனிமையில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு சுற்றித்திரிந்த 3 பேர் கொண்ட கும்பல், காதலனை தாக்கிவிட்டு, 19 வயது இளம்பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் ராணிப்பேட்டை அவரக்கரைப் பகுதியிலுள்ள பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த பாஸ்கரன் மகன் பார்த்திபன் (27), சங்கர் மகன் சிவராஜ் (27), நடராஜன் மகன் ராஜா (24) ஆகிய மூன்று பேரை ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர். மேலும், அவர்கள் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது.

குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை பெற்றுத் தரும் நடவடிக்கையிலும் போலீஸார் தீவிரம் காட்டினர். அதன்படி, இந்த வழக்கு விசாரணை ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

பாலியல் குற்றவாளிகள்

வழக்கு விசாரணையின் முடிவில், நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றம் நிரூபனமானதால், முதல் குற்றவாளியான பார்த்திபனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 27 ஆண்டுகள் கடுங்காவல் சிறையுடன் ரூ.1.40 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. தொடர்ந்து, இரண்டாவது குற்றவாளியான சிவராஜ், மூன்றாவது குற்றவாளியான ராஜா ஆகியோருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறையுடன் தலா ரூ.1.30 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து, மூன்று பாலியல் குற்றவாளிகளும் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

Source link