லண்டன் பயணத்தின் ஒரு முக்கிய நிகழ்வாக, பிரபல நடிகரும் சர்வதேசக் கார் பந்தய வீரருமான அஜித் குமார் பங்கேற்கும் ‘லீ மேன்ஸ் கப்’ (Le Mans Cup) சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை முதல்வர் விஜய் வரும் சனிக்கிழமை (செப்12) கொடியசைத்துத் தொடங்கி வைக்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இப்போட்டியை நடத்தும் லீ மேன்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.
முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம்
முன்னதாக, தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்’ (Motorsports City)உருவாக்கப்படும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பைச் சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக, உலகின் அதிநவீன மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்புகளுக்குப் பெயர் பெற்ற பிரிட்டனின் புகழ்பெற்ற ‘சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்’ அமைப்பை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யவுள்ளார்.தமிழ் சினிமாவில் இருபெரும் துருவங்களாக விளங்கிய விஜய்யும் அஜித்தும், தற்போது சர்வதேச விளையாட்டு அரங்கில் முதலமைச்சராகவும் பந்தய வீரராகவும் சந்தித்துக் கொள்ளும் இந்த நிகழ்வு, இரு தரப்பு ரசிகர்களிடையேயும் பெரும் மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தினாலும், தமிழக அரசியல் களத்தில் இதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்தவர்கள் விஜய் – அஜித். இவர்களின் ரசிகர்களுக்கு யார் பெரியவர் என்ற போட்டி மனப்பான்மை இன்றுவரை இருக்கிறது. ஆனால், விஜய் – அஜித் இருவரும் அதுபோன்ற பிம்பத்தை பொதுவெளியில் காட்டியது கிடையாது. விஜய் அரசியல் அரசியல் வருகை குறித்து பேச்சுகள் அடிப்பட்ட போது, அஜித் மெளனம் காத்து வந்தார்.
திமுகவுக்கு ஏற்படும் நெருக்கடி
விஜய்–அஜித் இருவரும் பல ஆண்டுகளாக தமிழக இளைஞர்களிடையே மிகப்பெரிய ரசிகர் செல்வாக்கைக் கொண்டவர்கள். இப்போது முதலமைச்சராக விஜய்யும், சர்வதேச கார் பந்தய வீரராக அஜித்தும் ஒரே மேடையில் சந்திப்பது, விஜய்க்கு ஒரு அரசியல் ரீதியான சாதகமான நிலையை உருவாக்கலாம். குறிப்பாக, அஜித்துக்கு இருக்கும் இளைஞர் மற்றும் நடுத்தர வர்க்க ரசிகர் ஆதரவு, மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீதான ஆர்வம், தொழில் முதலீடு மற்றும் சர்வதேச நிகழ்வுகள் ஆகியவற்றுடன் விஜய்யின் ஆட்சிப் பிம்பம் இணைவது திமுகவுக்கு சவாலாக அமையலாம். திமுக நீண்ட காலமாக தனதுதிராவிட அரசியல், நலத்திட்டங்கள், நிர்வாக அனுபவம் ஆகியவற்றை மையமாக வைத்து அரசியல் செய்து வருகிறது. அதற்கு மாறாக விஜய், இளைஞர்கள் + சினிமா பிரபலம் + புதிய தலைமுறை அரசியல் + உலகளாவிய பார்வை என்ற பிம்பத்தை முன்னிறுத்தினால், இளம் வாக்காளர்களை திமுக தக்கவைத்துக்கொள்வது சவாலாகலாம்.
அதிமுகவுக்கும் சவால்
அதிமுகவைப் பொறுத்தவரை, ஏற்கனவே திமுகவுக்கு எதிரான பிரதான எதிர்க்கட்சி இடத்தை தக்கவைப்பதில் போட்டி நிலவும் சூழலில், விஜய் தனக்கென ஒரு தனி வாக்கு வங்கியை உருவாக்குவது கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும்.
குறிப்பாக 18–35 வயதுக்குட்பட்ட புதிய தலைமுறை வாக்காளர்கள் மத்தியில்விஜய்யின் அரசியல் பிம்பம்வலுப்பெற்றால், அதிமுகவின் பாரம்பரிய வாக்கு அடித்தளத்திலும் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும், அஜித் போன்ற பிரபலங்களுடன் விஜய் இயல்பான நட்புறவு மற்றும் மரியாதையை வெளிப்படுத்துவது, சினிமா சார்ந்த பழைய ‘விஜய் vs அஜித்’ போட்டி அரசியலுக்கு வரக்கூடாது என்ற பிம்பத்தையும் உருவாக்கும். இது விஜய்யை இன்னும் முதிர்ச்சியான அரசியல் தலைவராக காட்டும் முயற்சியாகவும் பார்க்கப்படலாம்.
இளைஞர்களிடை ஏற்படும் தாக்கம்
அஜித் குமார் அரசியலில் நேரடியாக எந்த நிலைப்பாட்டையும் எடுத்துள்ளார் என்று இதிலிருந்து முடிவு செய்ய முடியாது. எனவே, அஜித்தின் ரசிகர்கள் அல்லது அவரது ஆதரவாளர்கள் விஜய்க்கு அரசியல் ஆதரவு அளிப்பார்கள் என்று கூறுவது மிகைப்படுத்தலாகிவிடும்.
ஆனால் விஜய்–அஜித் சந்திப்பு உருவாக்கும் தோற்றம், ஊடக கவனம் மற்றும் இளைஞர்களிடையேயான தாக்கம் ஆகியவை விஜய்க்கு அரசியல் ரீதியாக சாதகமான சூழலை உருவாக்கக்கூடும்.
விஜய்யின் திட்டங்களை முன்கூட்டியே கணிப்பது கடினமாக இருக்கிறது. ஆனால் அவர் செய்யும் ஒவ்வொன்றும் அவரது “டார்கெட் ஆடியன்ஸை” திருப்திப்படுத்தத் தவறுவதில்லை.. அந்த வகையில் அஜீத்தை வைத்து அவர் ஏதேனும் திட்டமிட்டால் அதுவும் அவருக்கு சாதமாகவே அமைய வாய்ப்புகள் அதிகம்.
