புதுடெல்லி: “பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக மேற்கொள்ளப்படும் தொகுதி மறுவரையறையில் வடக்கோ, தெற்கோ, சிறிய மாநிலமோ, பெரிய மாநிலமோ யாருக்கும் அநீதி இழைக்கப்படாது; யாருக்கும் பாகுபாடு காட்டப்படாது” என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.
மகளிர் இடஒதுக்கீடு தொடர்பாக மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “சிலர் வெறுப்பு அரசியல் ஆதாயத்துக்காகவே குழப்பங்களை விளைவிக்கின்றனர். வடக்கு, தெற்கு, கிழக்கு அல்லது மேற்கு என எந்த திசையில் உள்ள மாநிலமாக இருந்தாலும் சரி; சிறிய அல்லது பெரிய மாநிலங்களாக இருந்தாலும் சரி, தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடைமுறைகள் எவருக்கும் எதிராக பாகுபாடு காட்டாது என்பதை இந்த அவையின் புனிதமான இடத்தில் இருந்து முழு பொறுப்புணர்வுடன் நான் தெரிவிக்கிறேன்.
