சென்னை : ‘வடகிழக்கு பருவமழை காலமான, அக்டோபர் முதல் டிசம்பருக்குள், வட இந்திய பெருங்கடல் பகுதியில், மூன்று புயல்கள் உருவாகி, கடுமையான சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது’ என, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின், வளிமண்டலம் மற்றும் பெருங்கடல் அறிவியல் பிரிவான, ‘இஸ்ரோ – சாக்’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘இந்தியாவின் வடகிழக்கு பருவமழை காலமான, அக்., – டிச.,ல், வடஇந்திய பெருங்கடல் பகுதியில், மூன்று புயல்கள் உருவாகும். அவற்றின் வீரியம், கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, தீவிரமாக இருக்கும். அதனால், கடற்கரையை ஒட்டி வசிக்கும் மக்கள், சுற்றுலாத்துறை, அரசு நிர்வாகிகள் என, அனைவரும், புயல் பேரிடர்களை முன்பே திட்டமிட்டு, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
