வரத்துக்கு குறைந்ததால் எலுமிச்சை பழம் விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூபாய் 300க்கு விற்பனை ஆகிறது.
உடுமலையில் பருவநிலை நீர்வரத்து மற்றும் நீர் இருப்புக்கு ஏற்றவாறு குறுகிய மத்திய நீண்ட கால பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. அதன்படி காய்கறிகள், கீரைகள், தென்னை, வாழை, கரும்பு, எலுமிச்சை, சப்போட்டா, கொய்யா போன்ற பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.
அந்த வகையில் ஒரு சில பகுதியில் எலுமிச்சை சாகுபடி நடைபெற்று வருகிறது. இதில் ‘ராஜகனி’ என்று அழைக்க கூடிய எலுமிச்சையில் ஜூலை முதல் டிசம்பர் வரை அதிகமாக விளைச்சல் கிடைக்கும். இதேபோல் ஏக்கருக்கு 100 செடிகள் வரை நடவு செய்தால் கூடுதல் ஆதாயம் கிடைக்கும். செடி வகை சமதள பரப்பிலும் கொடி வகை மலை பிரதேசங்களிலும் சாகுபடி செய்யப்படுகிறது.
நடவு செய்த நாளில் இருந்து மூன்றாம் வருடம் அறுவடைக்கு தயாராகிவிடும். அன்றாட உணவில் எலுமிச்சம் பழத்தின் பயன்பாடு உள்ளதால் அவற்றுக்கான தேவையும் ஆண்டு முழுவதும் இருந்து வருகிறது.
கிலோ ரூ. 300
வைட்டமின் சி பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்களை தென்னகத்தை கொண்டு எலுமிச்சை பித்தம், தலை வலி, மலச்சிக்கல், தொண்டை வலி போக்குவதுடன் கிருமிகளை அழித்து அஜீரணப் பிரச்சனையை தீர்த்து வைக்கும் வல்லமை பெற்றது. மேலும் கோடைகாலத்தில் எலுமிச்சை சாறுடன் உப்பு நாட்டு சர்க்கரை சேர்த்து தயாரிக்கும் பானகமானது உடலில் ஏற்படும் நீர் இழப்பை குறைக்கிறது. இதனால் ஏராளமான விவசாயிகள் எலுமிச்சை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் பருவம் தவறிய மழை மற்றும் பருவநிலை மாற்றத்தால் எலுமிச்சை விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தைகளுக்கு வரத்து குறைந்து வருகிறது. இதன் காரணமாக அதன் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் கிலோ ரூபாய் 100 முதல் 150 வரை விற்பனையானது. ஆனால் தற்போது கிலோ ரூபாய் 300 விற்பனை ஆகிறது.
வரத்து குறைந்ததால்
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், எலுமிச்சை சாகுபடி உடுமலை காட்டிலும் கிழக்கு மாவட்டங்களில் அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் தென்காசி மாவட்டம் புளியங்குடி, திண்டுக்கல் மாவட்டம் உடுமலை, ஒட்டன்சத்திரம், பழனி ஆகிய பகுதிகளில் இருந்து எலுமிச்சம் பழத்தை வாங்கி வந்து மொத்தமாக விற்பனை செய்து வருகின்றோம். தற்போது கிலோ ரூபாய் 300 வரை விற்பனை ஆகி வருகிறது. வரத்து குறைவாக உள்ளதால் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதே போல் குமரலிங்கம் பகுதியில் எலுமிச்சை பழம் கிலோ ரூ.220 வரை விற்பனை ஆகிறது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
