வரலாற்றுப் பக்கத்தில் தவெக எம்.எல்.ஏ சத்யபாமா: பேரவைத் தலைவர் நாற்காலியில் அமர்ந்த முதல் பெண்

தமிழ்நாடு சட்டப்பேரவையின் வரலாற்றுச் சுவடுகளில் ஒரு புதிய மைல்கல்லாக, பேரவைத் தலைவரின் இருக்கையில் பெண் ஒருவர் அமர்ந்து அவையை வெற்றிகரமாக வழிநடத்தியுள்ளார். திருப்பூர் வடக்கு தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினரான வி. சத்யபாமா, மாற்றுச் சபாநாயகராகப் பொறுப்பேற்று இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.

தற்போது 2026 – 2027ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் தொடக்கம் முதலே பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, தற்போது துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இக்கூத்தொடரில், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறைகள் மீதான விவாதங்கள் நடந்த நாளில், வழக்கமாக அவையை நடத்தும் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் மற்றும் துணை சபாநாயகர் மு. ரவிசங்கர் ஆகிய இருவருமே பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மாற்றுச் சபாநாயகர் பட்டியலில் இடம் பெற்றிருந்த எம்.எல்.ஏ சத்யபாமா பேரவைத் தலைவர் நாற்காலியில் அமர்ந்து விவாதங்களைச் சீராக நெறிப்படுத்தினார். சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை வழிநடத்தும் மாற்றுச் சபாநாயகருக்கு, பேரவைத் தலைவருக்கான முழு அதிகாரங்களும் முறைப்படி வழங்கப்படுகின்றன. இதன்படி, பெண்ணொருவர் இந்த முக்கியப் பொறுப்பை ஏற்று அவையை வழிநடத்திய நிகழ்வை, திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட பல மக்கள் பிரதிநிதிகளும் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

பொதுவாக, ஒரு புதிய ஆட்சி அமைந்த பிறகு சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல்கள் முடிவடைந்ததும், பேரவைத் தலைவர் சார்பில் 6 பேர் கொண்ட ‘மாற்றுச் சபாநாயகர்கள்’ குழு நியமிக்கப்படும். சபாநாயகரும், துணை சபாநாயகரும் ஒரே நேரத்தில் அவைக்கு வர முடியாத சூழலில், இந்தச் சிறப்புப் பட்டியலில் உள்ள உறுப்பினர்கள் அவையை நடத்தும் பொறுப்பை ஏற்பார்கள்.

அந்த வகையில் 17வது சட்டமன்றத்திற்காக அறிவிக்கப்பட்ட மாற்றுச் சபாநாயகர்கள் பட்டியலில் தவெக சார்பில் ஆர். விஜய் சரவணன், வி. சத்யபாமா, மதார் பதுருதீன் ஆகியோரும், திமுக சார்பில் காதர் பாட்சா முத்துராமலிங்கம், அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம் மற்றும் காங்கிரஸ் சார்பில் தாரகை கத்பர்ட் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். அந்தப் பட்டியலின் அடிப்படையில் தற்போது வி. சத்யபாமா அவையை வழிநடத்தி, சட்டமன்ற வரலாற்றில் தனக்கென ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளார்.

Source link