வரிசையாக வந்த உலக தலைவர்கள்.. பின்னால் ராமேஸ்வரம் கோயில்! உலக கவனம் பெற்ற தமிழ்நாட்டு கோயில்

டெல்லி: தலைநகர் டெல்லியில் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்துக் கொண்ட போட்டோ உலகளவில் கவனம் பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த மற்றொரு முக்கிய அம்சம், இரு தலைவர்களுக்கும் பின்னால் இடம்பெற்றிருந்த ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் பிரம்மாண்டமான தூண் மண்டபக் காட்சி ஆகும்.

இந்தியா தலைமையில் நடைபெறும் 2026 பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் வரவேற்று வருகிறார். சனிக்கிழமை சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி வரவேற்றார். இரு தலைவர்களும் கைகுலுக்கி போட்டோவும் எடுத்து கொண்டனர். அப்போது பின்னணியில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் புகழ்பெற்ற தூண் மண்டபத்தின் போட்டோ இடம்பெற்றிருந்தது.

ஜி ஜின்பிங்குடன் கைகுலுக்கிய பின்னர், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் முக்கியத்துவம் குறித்தும் பிரதமர் மோடி விளக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாதசுவாமி கோயில், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட முக்கியமான சைவத் திருத்தலங்களில் ஒன்றாகும். ராமாயணத்துடனும் இந்த கோயிலுக்கு தொடர்பு இருப்பதாக புராணங்களில் கூறப்படுகிறது. இலங்கைக்கு செல்வதற்கு முன்பு ராமர் சிவபெருமானை வழிபட்டதாக ஐதீகம் உள்ளது.

மத முக்கியத்துவத்தைத் தாண்டி, தென்னிந்திய திராவிட கோயில் கட்டிடக்கலையின் சிறப்பையும் ராமநாதசுவாமி கோயில் வெளிப்படுத்துகிறது. பிரம்மாண்டமான கோபுரங்கள், நீண்ட தூண் மண்டபங்கள், சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்கள் மற்றும் பல்வேறு சன்னதிகள் இந்த கோயிலின் முக்கிய அம்சங்களாக உள்ளன.

ராமநாதசுவாமி கோயிலின் மிக பெரிய சிறப்புகளில் ஒன்று அதன் பிரம்மாண்டமான தூண் மண்டபங்களாகும். குறிப்பாக, கோயிலின் வெளிப்புற நடைபாதை உலகின் மிக நீளமான கோயில் நடைபாதையாக இருக்கிறது. இந்த நடைபாதை சுமார் 1,200 மீட்டர் நீளம் கொண்டதாகும். கோயில் வளாகத்தில் புகழ்பெற்ற நடைபாதைகளில் சுமார் 1,212 சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்கள் உள்ளதாக மத்திய சுற்றுலா அமைச்சகம் கூறியுள்ளது.

இதனால் பிரிக்ஸ் மாநாட்டின் உலக தலைவர்கள் பங்கேற்கும் முக்கிய நிகழ்வில் ராமேஸ்வரம் கோயிலின் காட்சி இடம்பெற்றது, தமிழ்நாட்டின் வரலாற்று மற்றும் கட்டிடக்கலை பாரம்பரியத்தை சர்வதேச கவனத்துக்கு கொண்டு வந்துள்ளது.

ஜி ஜின்பிங்கை தவிர, பிரேசில் வெளியுறவுத்துறை அமைச்சர் மவுரோ வியேரா, எத்தியோப்பிய பிரதமர் அபி அஹ்மத் அலி, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ உள்ளிட்ட தலைவர்களையும் பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி வரவேற்றார். அப்போது அவருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் இருந்தார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று டெல்லி வந்தடைந்தார். அவருடன் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழுவின் நிலைக்குழு உறுப்பினர் காய் கி மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி உள்ளிட்டோர் வந்துள்ளனர். கல்வான் மோதலுக்கு பிறகு சீன அதிபர் ஜின் ஜின்பிங் இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும்.