சென்னை: திண்டுக்கல்லில் வாழை இலை தட்டுப்பாடு காரணமாக சரித்திரம் காணாத விலை உயர்ந்து, ஒரு கட்டு வாழை இலை 6000 ரூபாய்க்கும் ஒரு இலையின் விலை 15 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. கடுமையான வறட்சி மற்றும் சுபமுகூர்த்தங்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வாழை இலைகளின் விலை கிடு கிடு உயர்வு வாழை இலை தட்டுப்பாடு காரணமாக 600 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கட்டு இலை 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தாலும், மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
திண்டுக்கல் வாழை இலை சந்தைக்கு திண்டுக்கல் மாவட்டத்தை சுற்றியுள்ள சிறுமலை, ஆடலூர் ,தாண்டிக்குடி ,பன்றிமலை, வெள்ளோடு, நரசிங்கபுரம், ஆத்தூர் , நிலக்கோட்டை ,அகரம் ,சின்னாளப்பட்டி, சாணார்பட்டி, கோபால்பட்டி, வடமதுரை, அய்யலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்துள்ள வாழை மரங்களிலிருந்து வாழை இலைகளை வெட்டி இந்த சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.
இங்கு வரக்கூடிய வாழை இலைகளை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வியாபாரிகள் உணவகங்கள் சிறு வியாபாரிகள் விற்பனைக்கு வாங்கி செல்வது வழக்கம் சென்ற மாதம் வரை 200 வாழையிலை கொண்ட ஒரு கட்டு 500 ரூபாய் முதல் 600 ரூபாய்க்கு விற்பனையானது.
கல்யாணம், காதுகுத்து, கோவில் திருவிழாக்கள் போன்ற விசேஷ காலங்களில் 600 ரூபாய்க்கு விற்பனையாக கூடிய ஒரு கட்டு வாழை இலை 1500 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரையே விற்பனையானது. ஆனால் தற்பொழுது கடும் வெயிலின் காரணத்தாலும் சூறாவளி காற்றால் வாழை மரங்கள் முற்றிலும் உறிந்தும் வாழ இலைகள் சேதம் அடைந்தும் காணப்படுவதால் இந்த வாழை இலை சந்தைக்கு குறைவான வாழை இலைகளை விற்பனைக்கு வருகை தந்து உள்ளது.
மேலும் கடுமையான வறட்சி விநாயகர் சதுர்த்தி விழா சுப முகூர்த்த தினங்கள் என்பதால் வாழை இலை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது இதனால் 600 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கட்டு வாழை இலை தற்பொழுது சரித்திரம் காணாத அளவிற்கு விலை உயர்ந்து ஒரு கட்டு வாழை இலை 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. மேலும் வறட்சி ஏற்பட்டால் வாழை இலைகளின் விலை மேலும் கூட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.
