எழுதியவர்: Amrita Nayak Dutta
அருணாச்சல பிரதேசத்தின் மேல் சுபன்சிரி மாவட்டத்தில் உள்ள டாக்சிங் பகுதியில் பதற்றம் நிலவுவதாகக் கூறப்படும் அறிக்கைகளுக்கு மத்தியில், இந்தியாவும் சீனாவும் வரும் நாட்களில் கோர்ப்ஸ் கமாண்டர் அளவிலான பேச்சுகளை நடத்த வாய்ப்புள்ளது.
நாகாலாந்தில் திமாபூர் அருகே ரங்கபஹாரை தலைமையிடமாகக் கொண்ட ராணுவத்தின் III கோர்ப்ஸ் (ஸ்பியர் கோர்ப்ஸ் – Spear Corps) தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் கிரீஷ் காலியா, விரைவில் தனது சீனப் பிரதிநிதி மற்றும் இதர அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் அறிந்துடைந்துள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.
நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் மத்திய மற்றும் கிழக்கு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (LAC) பகுதிகளின் செயல்பாடுகளுக்கு இந்த ஸ்பியர் கோர்ப்ஸ் பொறுப்பேற்கிறது.
பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் இரு தரப்பிலும் உள்ள உள்ளூர் தளபதிகளுக்கு இடையே கடந்த சில வாரங்களாக பல சுற்றுகளாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த வாரத்தின் தொடக்கத்தில், ராணுவத் தளபதி ஜெனரல் தீரஜ் சேத், ஸ்பியர் கோர்ப்ஸுக்கு நேரில் சென்று “அனைத்து படைகளின் செயல்பாட்டுத் தயார்நிலை மற்றும் தொடர்ந்து நடைபெற்று வரும் எல்லை வளர்ச்சி முயற்சிகளை ஆய்வு செய்தார்” என்று ராணுவம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. மேலும், திறன் மேம்பாட்டின் அனைத்து அம்சங்கள் குறித்தும், போர் திறனை மேலும் வலுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவருக்கு விளக்கமளிக்கப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 25 அன்று, எல்லைப் பேச்சுவார்த்தைகளுக்கான சிறப்புப் பிரதிநிதிகளான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி ஆகியோர் பெய்ஜிங்கில் சந்தித்தனர்.
அதன் தொடர்ச்சியாக மறுநாள், எல்லை நிர்ணயம் மற்றும் எல்லை மேலாண்மையின் “விரைவான மற்றும் குறிப்பிடத்தக்க பலன்களைப்” பெற விவாதங்களை முன்னெடுத்துச் செல்ல இந்தியாவும் சீனாவும் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் இரண்டு புதிய எல்லை ராணுவ ஹாட்லைன்கள் (Hotlines), ராணுவத் தளபதிகள் அளவிலான கூட்டங்களுக்கு இரண்டு புதிய சந்திப்பு புள்ளிகள் மற்றும் செப்டம்பரில் எல்லை கடந்து பாயும் நதிகள் குறித்த கூட்டத்தை நடத்துவது ஆகியவற்றுக்கும் ஒப்புக்கொள்ளப்பட்டது. கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் அமையவுள்ள இரண்டு ராணுவ ஹாட்லைன்களும் லக்னோ மற்றும் கொல்கத்தாவில் உள்ள ராணுவத் தளபதி தலைமையகங்களில் அமைப்பக்கப்பட வாய்ப்புள்ளது.
உத்தரகாண்டில் உள்ள ஜோஷிமத்தில் மூத்த தளபதிகள் அளவிலான பேச்சுவார்த்தைகளுக்காக எல்லைப் பணியாளர்கள் சந்திப்புப் புள்ளி (Border Personnel Meeting – BPM point) ஒன்றும் நிறுவப்படும். இதுபோன்ற சந்திப்புப் புள்ளிகள் ஏற்கனவே அருணாச்சல பிரதேசத்தின் தவாங் மற்றும் லடாக்கின் சுஷூல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
செப்டம்பர் 12-13 தேதிகளில் புதுடெல்லியில் நடைபெறும் பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2020 ஆம் ஆண்டில் கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் ராணுவ மோதல் தொடங்கியதைத் தொடர்ந்து மோசமடைந்த உறவுகளைச் சீரமைக்க புதுடெல்லியும் பெய்ஜிங்கும் முயன்று வருகின்றன. சீன அதிபர் ஷி ஜின்பிங் கடைசியாக அக்டோபர் 2019 இல் இந்தியாவிற்கு வருகை தந்தார். அப்போது இரு தலைவர்களின் இரண்டாவது முறைசாரா இருதரப்பு உச்சிமாநாட்டிற்காக அவர் சென்னைக்கு அருகில் உள்ள மாமல்லபுரத்திற்குப் பயணம் மேற்கொண்டார்.
