சென்னை: மின்சார கட்டணம் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து அதிகமாகவே வருவதாக பல்வேறு தரப்பினரும் புலம்பி வருகிறார்கள். இதற்கிடையே தவெக ஆட்சி அமைந்தபோது, சந்தோஷப்பட்டு வாழ்த்து கூறியிருந்த பெண் ஒருவரே தனது வீட்டிற்கு வரும் மின்சார கட்டணம் பல மடங்கு அதிகரித்துவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவரது வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
கடந்த சில மாதங்களாக, குறிப்பாக தவெக ஆட்சி அமைந்தது முதலே மின்சாரக் கட்டணம் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. மின்சாரக் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும், அதற்கேற்ற வகையில் மின்சாரம் கிடைப்பதில்லை என்றும் சிலர் சமூக வலைத்தளங்களில் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே தேர்தல் முடிவுகள் வெளியான அன்று தவெகவுக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டு, அக்கட்சி ஆட்சிக்கு வந்து நல்ல ஆட்சியை வழங்க வேண்டும் என வாழ்த்து தெரிவித்த பெண் ஒருவர், தற்போது மின்சாரக் கட்டணம் குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். மின்சார கட்டணம் உயர்ந்தது மட்டுமின்றி, பல மணி நேரம் வரை மின்சாரம் கூட இருப்பதில்லை என அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “போன மாதம் எனக்கு ரூ.8,000 மின்சாரக் கட்டணம் வந்திருந்தது. இந்த மாதம் ரூ.4,000 வந்திருக்கிறது. போன மாதத்தைவிட இந்த மாதம் ரூ.4,000 குறைவாக வந்திருக்கிறது என்று சந்தோஷப்படுவதா? அல்லது அதற்கு முன்பு வரை வெறும் ரூ.1,500 தான் மின்சார கட்டணமாக வந்தது என்பதை நினைத்து கவலைப்படுவதா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
இது போதாதென்று, நாம் செலுத்தும் மின்சார கட்டணத்துக்கு ஏற்ற அளவுக்கு மின்சாரம் இருப்பதும் இல்லை. இரவு 10 முதல் 15 மணி மின்சாரம் எடுக்கப்படுகிறது. பகலிலும் 10 முதல் 15 நேரம் மின்சாரம் எடுக்கப்படுகிறது. மீதமிருக்கும் நேரத்துக்கு மட்டும் மின்சாரம் எதற்கு? பழங்காலத்தை போல விளக்கு ஏற்றி வாழ்ந்துவிடலாம்.
மாதம் ரூ.4,000 முதல் ரூ.8,000 வரை மின்சாரக் கட்டணம் செலுத்துவது சாதாரண தொகை இல்லை. என் பிள்ளைகளுக்கான பள்ளிக் கட்டணமே ரூ.30,000 முதல் ரூ.35,000 வரைதான். அதில்கூட பாதியை மட்டும் கட்டிவிட்டு, மீதியை கட்ட முடியாமல் இருக்கிறோம். இப்படி மாதம் மாதம் மின்சாரக் கட்டணமாக செலுத்தும் தொகையை கணக்கு பார்த்தால், பிள்ளைகளுக்கான பள்ளி கட்டணத்தைவிட அதிகமாக இருக்கிறது.
A post shared by Oneindia Tamil (@oneindiatamilofficial)
இதற்கு ஆட்சியை குறை சொல்ல வேண்டுமா அல்லது வேறு எதை குறை சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை. ஆனால், இதுபோன்ற நிலைமைகள் கொஞ்சம் மாறினால் நன்றாக இருக்கும். கட்டணம் செலுத்த முடிந்தவர்கள் வந்தவுடன் கட்டிவிடலாம். ஆனால் கட்ட முடியாதவர்களுக்கு வரும் மின்சார கட்டணம் பெரும் சுமையாகவே இருக்கிறது” என்று கூறியிருந்தார்.
இவர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினும் மின்சார கட்டணம் குறித்து அதிருப்தி தெரிவித்தே வருகிறார்கள். அரசு 200 யூனிட் மின்சாரம் இலவசம் என அறிவித்தாலும் கூட மின்சார கட்டணம் அதிகமாகவே இருப்பதாக பலரும் புகாரளித்துள்ளனர். மேலும், மின்வெட்டும் கூட பல இடங்களில் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. இதை கண்டித்து ஆங்காங்கே போராட்டங்களும் கூட நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இதே பெண் தான் தேர்தல் முடிவுகள் வெளியான தவெகவை பாராட்டியிருந்தார். அப்போது அவர், “தவெக அதிக இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. ஈஸியாக ஆட்சியை பிடித்துவிடுவார்கள். அதையும் தாண்டி அவர் நல்ல ஆட்சி கொடுக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. மற்றவர்களை போல இல்லாமல் உண்மையான நல்லாட்சியை மக்களுக்கு பிடித்த ஆட்சியை வந்து அவர் அமைக்க வேண்டும். இதுதான் மக்களின் ஆசை” என கூறியிருந்தார்.
முன்பு அவர் பேசியிருந்த அந்த வீடியோவும் இப்போது அவர் மின்சார கட்டணம் தொடர்பாக குற்றஞ்சாட்டிய இந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
