24 மணி நேரம் மட்டும் இந்தியாவில் இருந்த சீன அதிபர். ஆனால் 15,000 போலீஸ், 700 CCTV.. கடும் பாதுகாப்பு

டெல்லி: 7 ஆண்டுகளுக்கு பிறகு சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வந்திருந்தார். பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று தலைநகர் டெல்லிக்கு வந்த அவருக்கு பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெறும் 24 மணி நேரம் மட்டுமே அவர் இந்தியாவில் இருந்தாலும் கூட 15,000 காவலர்கள் தொடங்கி பல உச்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வந்திருந்தார். கல்வான் மோதலுக்கு பிறகு, இரு நாட்டு உறவு மெல்ல சீரடைந்து வரும் நிலையில், சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு சீன அதிபர் இந்தியா வந்தார். நேற்று சனிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அவர் ஆலோசனை நடத்தினார்.

ஜி ஜின்பிங்குடன் சீனாவின் மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் தொழில்துறை தலைவர்கள் அடங்கிய உயர்மட்ட குழுவும் இந்தியா வந்திருந்தது. தொடர்ந்து இன்று நன்பகலில் சீனாவுக்கு கிளம்பினார். வெறும் 24 மணி நேரம் மட்டுமே அவர் இந்தியாவில் இருந்தார் என்ற போதிலும் அவருக்கு உச்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

ஜி ஜின்பிங் டெல்லியில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலில் தங்கினார். அவரது வருகையை முன்னிட்டு ஹோட்டலை சுற்றி மிக தீவிரமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த ஹோட்டலில் உள்ள அனைத்து ரூம்களும் முன்பதிவு செய்யப்பட்டது. மேலும், ஜி ஜின்பிங் தங்கும் ஹோட்டல் மீது நோ ப்ளை ஜோன் அமல்படுத்தப்பட்டது. அதாவது எந்தவொரு விமானமும் அங்கு பறக்கக்கூடாது. அப்படி பறந்தால் அவை சுட்டு வீழ்த்தப்படும்.

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் வெடிகுண்டு கண்டறியும் குழுக்கள் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஹோட்டல் வளாகம் முழுவதும் விரிவான சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. சாதாரண பாதுகாப்பு சோதனைகளைத் தாண்டி, அணு, கதிர்வீச்சு மற்றும் பயோகெமிக்கல் அச்சுறுத்தல்களைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. ஹோட்டலை சுற்றியுள்ள நிலத்தடி குழாய்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளும் கூட ஆய்வு செய்யப்பட்டன.

ஜி ஜின்பிங்கின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் அவரது அதிகாரப்பூர்வ காருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து சுமார் 10 நாட்களுக்கு முன்பே ஒரு சரக்கு விமானம் இந்தியா வந்த நிலையில், அதில் ஜி ஜின்பிங்கின் லிமோசின் கார் எடுத்து வரப்பட்டது. அத்தோடு மாற்று வாகனம் மற்றும் தகவல் தொடர்பு உபகரணங்களும் கொண்டு வரப்பட்டது.

அதேநேரம் அவர்கள் நினைத்த அனைத்தையும் எடுத்த வர முடியாது. இந்திய விதிகளை பின்பற்ற வேண்டும். உதாரணத்திற்கு சாட்டிலைட் செல்போன்களுக்கு கட்டுப்பாடு உள்ளது. மேலும், குறிப்பிட்ட சில ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களையும் இந்தியாவுக்குள் கொண்டு வர முடியாது. அப்படி எடுத்து வந்தால் அதை சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

ஜி ஜின்பிங் பயணிக்கும் விமானமும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கொண்டதாக உள்ளது. சீனாவின் ஏர் சீனா நிறுவனத்தால் இயக்கப்படும் போயிங் 747-8 விமானமே சீன அதிபரின் முக்கிய அரசு விமானமாக பயன்படுத்தப்படுகிறது. அதில் அதிபருக்கு ஏற்ப பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் சாதாரண பயணிகள் விமானமாக இருந்த இந்த விமானம் 2015 சீன அதிபரின் பயணத்திற்காக தேர்வு செய்யப்பட்டது.2016 முதலே இதைத்தான் சீன அதிபர் பயன்படுத்துகிறார்.

விஐபி வசதிகளுடன், தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் சிறப்பு பாதுகாப்பு தொழில்நுட்பங்களுடன் இந்த விமானம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. என்கிரிப்ட் செய்யப்பட்ட சாட்டிலைட் தகவல் தொடர்பு வசதி இருப்பதால், விமானத்தில் இருந்தபடியே தேவையான அனைத்து உத்தரவுகளையும் பிறப்பிக்க முடியும். மேலும், அச்சுறுத்தல்களைக் கண்டறியும் அமைப்புகள், ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு அம்சங்களும் அதில் உள்ளன.

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஜி ஜின்பிங் மட்டுமின்றி பல்வேறு உயர்மட்ட பாதுகாப்பு தலைவர்களும் டெல்லி வந்திருந்தனர். இதற்காக 15,000க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் 200 துணை ராணுவ படை நிறுவனங்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பல இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் சோதனை செய்யப்படுகின்றன. டெல்லியின் பல்வேறு பகுதிகள் மற்றும் மண்டலங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் முதல் உச்சி மாநாடு நடைபெறும் இடம் வரை வழித்தடத்தில் 700க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மற்றும் 5 கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், துக்ளக் ரோடு காவல் நிலையத்தில் தனியாக சிசிடிவி கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்தபடியே சுமார் 500 கேமராக்களை கண்காணிக்க முடியும்.