உலக மக்கள் தொகையில் பாதியளவையும், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீதத்தையும் கொண்டுள்ள பிரிக்ஸ் (BRICS) அமைப்பு வெறும் பேச்சோடு நின்றுவிடாமல், உறுதியான வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளாக மாற்றப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
பிரிக்ஸ் வணிக மன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, கடந்த 2006-ல் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் கூட்டு ஜிடிபி உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சியை விட சுமார் 4.5 மடங்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார். உலகளவில் வர்த்தகத் தடைகள் அதிகரித்து வரும் சூழலில், நாடுகள் இடையே பொருளாதாரப் பாலங்களை உருவாக்குவதே இந்தியாவின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கூட்டங்கள் வெறும் விவாதங்களுடன் சுருங்கிவிடாமல், உறுதியான அளவிடக்கூடிய இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும் எனப் பிரிக்ஸ் வணிகக் கவுன்சிலுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி, இதற்காக ’10-100-1000′ என்ற மூன்று அம்ச செயல் திட்டத்தை முன்வைத்தார். இதன் மூலம் உறுப்பு நாடுகளுக்கு இடையே உள்ள முக்கிய வணிகத் தடைகளில் முதல் 10 தடைகளை அகற்றுவது, ஒவ்வொரு ஆண்டும் 100 ஸ்டார்ட்-அப்கள் பிற நாடுகளின் சந்தைகளில் விரிவுபடுத்த உதவுவது மற்றும் 1,000 புதிய வணிகக் கூட்டாண்மைகளை உருவாக்குவது போன்ற இலக்குகள் நிறைவேற்றப்பட்டு ஆண்டுதோறும் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்றார்.
புவிசார் அரசியல் மோதல்களால் ஏற்பட்டுள்ள தடைகளுக்கு மத்தியில், உலகளாவிய வர்த்தகம் சீராக இயங்கப் பாதுகாப்பான கடல் வழிகளும், திறந்த விநியோகச் சங்கிலிகளும் அவசியமானவை என்று சுட்டிக்காட்டிய அவர், ஹோர்முஸ் மற்றும் பாப் எல்-மந்தேப் ஜலசந்தி போன்ற முக்கியமான கடல் வழிகளின் பின்னணியில் கடல்சார் பாதுகாப்புக்கு இந்தியா உறுதுணையாக நிற்கும் என்றார்.
இந்தியாவின் பொருளாதார மற்றும் புத்தாக்க சுற்றுச்சூழல் அமைப்பை விளக்கிய அவர், இந்தியாவில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப்களும், 120-க்கும் அதிகமான யூனிகார்ன் நிறுவனங்களும் உள்ளதாகக் கூறி, செயற்கை நுண்ணறிவு, பசுமை ஹைட்ரஜன் மற்றும் செமிக்கண்டக்டர் போன்ற துறைகளில் இந்தியாவின் முன்னேற்றங்களை எடுத்துரைத்தார். மேலும், இந்தியாவின் யுபிஐ (UPI) கட்டண முறை பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே டிஜிட்டல் ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்த உதவும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
“இந்தியாவில் உருவாக்குங்கள், இந்தியாவுடன் இணைந்து புதுமைகளைப் புகுத்துங்கள், உலகிற்காக விரிவுபடுத்துங்கள்” (“Make in India, Innovate with India, Scale for the World”) என்ற முழக்கத்துடன், உலகளாவிய சந்தைகளுக்கான உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப மையமாக இந்தியாவை பிரதமர் மோடி நிலைநிறுத்தினார்.
