8th Pay Commission Meeting Schedule,சென்னையில் கூடும் 8ஆவது ஊதியக் குழு: முழுமையான பட்டியல் வெளியீடு – chennai to bengaluru check full meeting schedule dates and other important details

8ஆவது ஊதியக் குழுவின் ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ மாநிலப் பயணங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 8ஆவது ஊதியக் குழுவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகளின்படி, இறுதிப் பரிந்துரைகளை வழங்குவதற்கு முன்பு பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ஊழியர் சங்கங்கள், பிரதிநிதிகள் குழுக்கள், ஓய்வூதியதாரர் சங்கங்கள் மற்றும் பிற தரப்பினரை இக்குழு சந்திக்கவுள்ளது.

சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு, ரயில்வே பணியாளர்கள் மற்றும் ஓய்வுபெற்றோர் உள்ளிட்ட கிட்டத்தட்ட 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உட்பட 1 கோடிக்கும் அதிகமானோர் இக்குழுவின் பரிந்துரைகளால் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை, புதுச்சேரி, சண்டிகர், பெங்களூரு மற்றும் மத்திய ரயில்வேயின் மும்பை மண்டலம் உள்ளிட்ட நகரங்களுக்கு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 8ஆவது ஊதியக் குழு மேற்கொள்ளும் முழுமையான பயணம் மற்றும் ஆலோசனைக் கூட்டங்கள் குறித்த பட்டியலை தற்போது பார்க்கலாம்.

செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் நடைபெறும் பயணங்கள்!

ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்றோருக்கான ஊதியங்கள், படிகள் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான இறுதிப் பரிந்துரைகளை வழங்குவதற்கு முன்பு தரவு சேகரிப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டங்களை நடத்துவதற்காக மார்ச் மாதம் முதல் பல்வேறு மாநிலங்களுக்கு ஊதியக் குழு பயணம் மேற்கொண்டு வருகிறது. பல்வேறு பிரதிநிதிகள் முன்வைக்கும் கோரிக்கைகளும் ஆலோசனைகளும் ஊதியக் குழுவின் ஆலோசனைகளுக்கு அடிப்படையாக அமையும் என்பதால் இந்தக் கூட்டங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. பங்கேற்கும் சங்கங்களும் குழுக்களும் பாதுகாப்பு மற்றும் ரயில்வே பணியாளர்கள் உட்பட ஏராளமான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

திட்டமிடப்பட்ட கூட்டங்களின் முழு விவரம்!

சென்னை – செப்டம்பர் 7 – 8 : செப்டம்பர் 7 மற்றும் 8 (திங்கள் மற்றும் செவ்வாய்) ஆகிய தேதிகளில் 8ஆவது ஊதியக் குழு சென்னைக்குச் செல்கிறது. ஆகஸ்ட் 18 அல்லது அதற்கு முன்பாக சந்திப்புக்கான கோரிக்கையைச் சமர்ப்பித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பங்குதாரர்களுக்கு நேரம் ஒதுக்கப்படும்.

புதுச்சேரி – செப்டம்பர் 9 : செப்டம்பர் 9 (புதன்கிழமை) அன்று ஊதியக் குழு புதுச்சேரிக்குச் செல்கிறது. ஆகஸ்ட் 18ஆம் தேதிக்குள் சந்திப்புக்கான கோரிக்கைகளைச் சமர்ப்பித்த யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த பங்குதாரர்களுக்கு மட்டுமே நேரம் வழங்கப்படும்.

சண்டிகர் – செப்டம்பர் 16 – 18 : செப்டம்பர் 16 முதல் 18 வரை (புதன் முதல் வெள்ளி வரை) சண்டிகரில் ஊதியக் குழு ஆய்வு மேற்கொள்ளும். ஆகஸ்ட் 25 அல்லது அதற்கு முன்பாக சந்திப்புக்கான கோரிக்கைகளைச் சமர்ப்பித்த சண்டிகர், பஞ்சாப், ஹரியானா மற்றும் ஹிமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பங்குதாரர்களுக்கு நேரம் ஒதுக்கப்படும்.

பெங்களூரு – அக்டோபர் 7 – 8 : அக்டோபர் 7 மற்றும் 8 (புதன் மற்றும் வியாழன்) தேதிகளில் பெங்களூருக்கு ஊதியக் குழு செல்கிறது. சந்திப்பை விரும்பும் பங்குதாரர்கள் செப்டம்பர் 18 வரை அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் தங்கள் கோரிக்கைகளைச் சமர்ப்பிக்கலாம்.

மும்பையில் கூட்டம் எப்போது?

மும்பை பயணம் தொடர்பான தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், ரயில்வே ஊழியர்களின் பணிச்சூழலை நேரடியாகத் தெரிந்து கொள்ளும் வகையில் மும்பையில் உள்ள மத்திய ரயில்வே (CR) மண்டலத்தின் கீழ் இயங்கும் ரயில்வே துறைகளுக்கு ஊதியக் குழு பார்வையிடத் திட்டமிட்டுள்ளதாக கடந்த மாதம் ரயில்வே அமைச்சகம் தெரிவித்தது.

8ஆவது ஊதியக் குழுவின் குழு உறுப்பினர்கள்!

இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் 8ஆவது ஊதியக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, புதிய ஊதியக் குழுவின் பகுதி நேர உறுப்பினராக ஐஐஎம் பெங்களூரு பேராசிரியர் புலக் கோஷ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் செயலர் பங்கஜ் ஜெயினை ஊதியக் குழுவின் உறுப்பு-செயலராக அரசு நியமித்துள்ளது.

கால அட்டவணை!

8ஆவது ஊதியக் குழு தனது இறுதி அறிக்கையை 2027ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும் அதன் பரிந்துரைகளைச் செயல்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து இறுதி முடிவெடுக்கும். 8ஆவது மத்திய ஊதியக் குழுவை அமைப்பதற்கு கடந்த 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதன் அறிக்கையைச் சமர்ப்பிக்க 18 மாத காலக்கெடுவுடன், 2025 ஆம் ஆண்டு நவம்பர் 3 அன்று இக்குழு அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்டது. 2026 ஜூலை நடுப்பகுதி நிலவரப்படி, எட்டு மாதங்களுக்கும் மேலாக கடந்துவிட்ட நிலையில், குழு தனது பணிகளை முடிக்க இன்னும் கிட்டத்தட்ட 10 மாதங்கள் மட்டுமே மீதமுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Source link