மிகக் கடுமையான உடல் உபாதைகள் மற்றும் எழுதுவதிலும், அமர்வதிலும் உள்ள நடைமுறை சவால்கள் உள்ளிட்ட எதையும் பொருட்படுத்தாமல், தொடர் பயிற்சி மற்றும் முயற்சியால் ஐஐடியில் சேர்ந்துள்ளார் மாணவர் சந்தோஷ்.
தேசிய அளவில் மிகவும் கடினமான தேர்வாக கருதப்படும் ஐஐடி மெட்ராஸ் தகுதித் தேர்வில், தனது அறிவாற்றலால் தேர்ச்சி பெற்று இடம் பிடித்துள்ளார். மாணவரின் அயராத உழைப்புக்கு உறுதுணையாக இருந்த பெற்றோரின் அர்ப்பணிப்பும், தியாகமும் இதில் பெரும்பங்கு வகிக்கிறது.
சந்தோஷை தொடர்ந்து கவனித்துக் கொண்டு, பள்ளிக்கும், தேர்வு மையங்களுக்கும் அழைத்துச் செல்வது வரை தேவையான வசதிகளை அமைத்துக் கொடுத்து பெற்றோர் தூணாக நின்றது முக்கியமானது.
உடல் பாதிப்புகளைக் கடந்து, இலக்கை நோக்கி மட்டுமே செயல்படும் மன உறுதி இருந்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்பதற்கு மாணவர் சந்தோஷின் வெற்றி மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
மிகவும் எளிய குடும்ப பின்னணியைச் சேர்ந்தவர் மாணவர் சந்தோஷ். சிறு வயதில் இருந்தே தசைச் சிதைவு சார்ந்த பாதிப்பினால் 90% உடல் அசைவுகளை இழந்து, சக்கர நாற்காலியின் துணையோடு இயங்கி வருகிறார் சந்தோஷ்.
கை விரல்களை அசைப்பதும், நீண்ட நேரம் அமர்ந்திருப்பதும் இவருக்கு பெரும் வலியைத் தரும். இருப்பினும் புத்தகங்கள் மற்றும் ஆன்லைன் வழியாக கணிதம் மற்றும் கணினி அறிவியலை கற்று வந்தார்.
