4 சவரன் நகைக்காகப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம் : மூவர் கைது!

சேலம் மாநகர் அரிசிப்பாளையம் பகுதி குணபாலா ராமசாமி தெருவில் உள்ள கோவில் பூசாரி  ராமசாமி என்பவரின் வீட்டு  குடிநீரில் நேற்று (31.08.2026) பயங்கரமான துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து, வீட்டின் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியைச் சென்று பார்த்துள்ளனர். அப்போது, துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் இரண்டு மூட்டைகளாக கட்டப்பட்டு தண்ணீர் தொட்டிக்குள் வீசப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் ரமேஷ் புகார் அளித்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் மற்றும் தடயவியல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இந்நிலையில், கைப்பற்றப்பட்ட உடலின் கையில் ஒரு பெயர் பச்சை குத்தப்பட்டிருந்தது காவல்துறையினரின் கவனத்திற்கு வந்தது. இதுகுறித்த தகவலின் அடிப்படையில், உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் நேற்று மாலை காவல் நிலையத்திற்கு சென்று அடையாளம் தெரிவித்தனர். இதையடுத்து, இந்த வழக்கில் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக உயிரிழந்த தங்கமணி என்ற பெண் சமையல் வேலை உள்ளிட்ட வீட்டு வேலைகளை செய்து வந்துள்ளார். அவருக்கு சுமார் பத்து நாட்களுக்கு முன்பு பழக்கமான பெண் ஒருவர், அரிசிப்பாளையம் பகுதியில் உள்ள தனது சித்தி வீட்டில் சமையல் வேலை இருப்பதாகக் கூறி தங்கமணியை அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு அந்த பெண் தனது இரண்டு ஆண் நண்பர்களுடன் சேர்ந்து தங்கமணியை கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி, கழுத்தில் அணிந்திருந்த நான்கு சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டுள்ளனர். இதையடுத்து, உடலை மூட்டைகளாக கட்டி தண்ணீர் தொட்டிக்குள் வீசியதாக காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. நான்கு சவரன் தங்க நகைக்காக பெண் கொலை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள சம்பவம்  சேலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source link