தீவிர சிகிச்சைப் பிரிவில் அன்னா ஹசாரே; சமூக ஆர்வலர்கள் கவலை

பிரபல சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே உடல் நலக் குறைபாடு காரணமாகக்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மராட்டிய மாநிலம், அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ராலேகான் சித்தி கிராமத்தைச் சேர்ந்த இவர், சமூகம் சார்ந்த பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளார். குறிப்பாக, நீர்வள மேம்பாடு, காடு வளர்ப்பு, மது ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டார். ஊழலுக்கு எதிரான தனது உண்ணாவிரதப் போராட்டத்தின் மூலமாகத் தேசிய அளவில் புகழ் பெற்றவர் இவர். 

இந்நிலையில், 87 வயதான அன்னா ஹசாரே உடல் நலம் பாதிக்கப்பட்டுச் சிரமப்பட்டு வந்தார். அதனால், கடந்த திங்களன்று (31-08-26) தனது கிராமத்திற்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இருப்பினும், கடுமையான வைரஸ் தொற்று, நீரிழப்பு, மற்றும் சிறுநீரக செயல்பாட்டுப் பரிசோதனைகள் தொடர்பாக மேம்பட்ட சிகிச்சைக்காக அவர் மும்பைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.  

அங்கு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ரத்தப் பரிசோதனையில் சிறுநீரகத் தொற்று இருப்பது தெரியவந்ததாகவும், சிகிச்சைக்குப்பின் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான ஆதரவாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் நலம் விரும்பிகளும் இவரது உடல் நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளனர். மேலும், அவர் விரைவில் குணமடைய வேண்டும் எனவும்  ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.  

Source link