இருப்பினும் சில்லறை விற்பனையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு மாதத்துக்கு முன்பு விற்கப்பட்ட விலையுடன் ஒப்பிடுகையில் 30 சதவீதமும், கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் விற்கப்பட்ட விலையுடன் ஒப்பிடுகையில் 38.63 சதவீதம் அதிகமென்றும் மத்திய அரசின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
எனினும் தற்போது சர்க்கரை தட்டுப்பாடு இல்லை என்றும், அரசின் நடவடிக்கைகளால் விலை வரும் நாட்களில் குறைய வாய்ப்புள்ளதாகவும் இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சர்க்கரை விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசின் நடவடிக்கைகளாகவே இந்த செய்தி தற்போது வந்துள்ளது. சர்க்கரை விலை உயர்வைத் தடுக்கவும், பதுக்கலைக் கட்டுப்படுத்தவும் வியாபாரிகளுக்கான சர்க்கரை இருப்பு வரம்பை மத்திய அரசு 4,000 குவிண்டாலில் இருந்து 2,000 குவிண்டாலாகக் குறைத்து உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய வரம்பு செப்டம்பர் 15 முதல் அமலாகும் எனவும் நவம்பர் 30 வரை அமலில் இருக்கும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
உள்நாட்டுச் சந்தையில் போதுமான சர்க்கரை இருப்பை உறுதி செய்வதற்கும் , வியாபாரிகளின் சர்க்கரைப் பதுக்கலைத் தடுப்பதற்கும் வழிவகை செய்யும் வகையில் மத்திய அரசு சர்க்கரை வியாபாரிகளுக்கான கையிருப்பு வரம்பை குறைத்துள்ளது.
