கீவ்: உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடுத்துள்ள இந்த அநீதியான போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் இந்தியா கொண்டுள்ள உறுதிப்பாட்டிற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
இது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை நான் சந்தித்தேன். நாங்கள் முக்கிய விஷயங்கள் குறித்து விவாதித்தோம். உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடுத்துள்ள இந்த அநீதியான போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் இந்தியா கொண்டுள்ள உறுதிப்பாட்டிற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம். இது நிச்சயமாகப் போருக்கான நேரம் அல்ல. அமைதி அவசியம். இதுவே இந்தியாவின் தெளிவான நிலைப்பாடாகும்.
தற்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எங்களுடன் கீவ் நகரில் இருந்தபோது கூட, ரஷ்யா ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது; இவை ஈரானின் உதவியுடன் உருவாக்கப்பட்டவை. எங்கள் போர் விமானப்படையின் செயல்பாட்டிற்கு நன்றி.
ஏனெனில், இந்த ட்ரோன்களில் பெரும்பாலானவற்றை உக்ரைனின் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தின. இந்தப் போர் முடிவுக்கு வர வேண்டும்; அமைதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று உலகின் பிற முக்கிய நாடுகளும் தெளிவான நிலைப்பாட்டை எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
நிச்சயமாக, கருங்கடல் பகுதியில் நிலவும் சூழல் குறித்தும், குறிப்பாக சிவிலியன் கப்பல் போக்குவரத்திற்கு உள்ள அச்சுறுத்தல்கள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம். உணவு விநியோகம் மிகவும் முக்கியமானது. மக்கள் கடல்வழிப் போக்குவரத்தை பெரிதும் சார்ந்திருக்கும் பகுதிகளுக்கு உணவு விநியோகத்தைத் தடுப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
எங்கள் துறைமுகங்கள், உணவுப்பொருட்கள் விநியோகங்களைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட ரஷ்யாவின் நடவடிக்கைகள் உலகளாவிய உறவுகளில் பெரும் இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. பாதுகாப்பை உறுதி செய்ய நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
