“அம்மா வேணும்” கதறும் 3 குழந்தைகள்.. குடும்பக் கட்டுப்பாட்டு ஆபரேஷனுக்குப் பிறகு இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்ட சில மணி நேரங்களிலேயே இளம் தாய் உயிரிழந்த சம்பவம் சேலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 3 குழந்தைகளை தவிக்கவிட்டு உயிரிழந்த பெண்ணின் மரணத்துக்கு சிகிச்சை முறையில் ஏற்பட்ட தவறே காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளதால், இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை கோரிக்கை எழுந்துள்ளது.

கருமந்துறை அருகே மோதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுமதி. மாதேஸ்வரனை திருமணம் செய்துகொண்ட இவருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில், கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்தது. மூன்றாவது குழந்தை பிறந்ததைத் தொடர்ந்து குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்துகொள்ள அவர் முடிவு செய்தார்.

இதற்காக வாழப்பாடி அருகேயுள்ள ஆரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்ற சுமதிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், சிகிச்சை முடிந்த பிறகு அவரது உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. நிலைமை கவலைக்கிடமானதால் உடனடியாக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் சுமதி உயிரிழந்தது தெரியவந்தது. சில மணி நேரத்துக்கு முன்பு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற இளம் பெண், தற்போது உயிரிழந்த நிலையில் திரும்பிய சம்பவம் அவரது குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, சுமதிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து உறவினர்கள் கேள்வி எழுப்பினர். மருத்துவர்களின் சிகிச்சையில் ஏற்பட்ட தவறுதான் அவரது உயிரிழப்புக்கு காரணம் என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

தாயை இழந்த நிலையில் 3 குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக வேதனை தெரிவித்த உறவினர்கள், குடும்பத்துக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மரணத்துக்கான காரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

Also Read: மனைவி செய்யும் வீட்டு வேலைக்கு மாத சம்பளம்.. கணவருக்கு சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு!

Source link