கேரளம் மாநிலம், இடுக்கி மாவட்டம் தொடுப்புழா காவல்நிலையத்தில் சைபர் கிரைம் பிரிவில் பணியாற்றி வருபவர் பெண் காவல் அதிகாரியான சஜீதா சலீம்.
இவர் தனது முகநூல் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும், மத்திய பாஜக அரசுக்கு எதிரான கருத்துக்களையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இது சம்பந்தமாக இடுக்கி மாவட்ட பாஜக இளைஞரணி (யுவ மோர்ச்சா) தலைவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக முகநூல் கருத்துக்களை சஜிதா சலீம் பதிவிட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சஜீதா சலீமை பணியிடை நீக்கம் செய்து சைபர் கிரைம் பிரிவு ஐஜி உத்தரவிட்டுள்ளார்.
டெல்லியில் நடைபெறும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பதிவுகளைப் பரப்புவதன் மூலமும், மத்திய அரசு குறித்து இழிவான கருத்துக்களையும் தவறான தகவல்களையும் பகிர்ந்ததன் மூலமும், அந்த அதிகாரி சமூக ஊடக நடத்தை குறித்த காவல்துறை தலைமையக வழிகாட்டுதல்களை மீறியதாக அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
