சமூக நீதி காவலர் எல். இளையபெருமாளின் 21வது நினைவு நாளையொட்டி, கடலூர் மாவட்டம் சிதம்பரம் புறவழிச்சாலையில் தமிழக அரசு அமைத்துள்ள அவரது நூற்றாண்டு நினைவரங்கத்தில் உள்ள உருவச் சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவரும், நந்தனார் கல்விக் கழகத் தலைவருமான கே.ஐ. மணிரத்தினம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் கே.ஐ. மணிரத்தினம் கூறியதாவது, “ஐயா எல். இளையபெருமாள், ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் முன்னேற்றத்திற்காக தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர்.
பட்டியலின மக்களின் கல்வி, சமூக மற்றும் அரசியல் முன்னேற்றத்திற்காக அரும்பணியாற்றிய அவர், அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டியின் முதல் தலைவராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் சிறப்பாகப் பணியாற்றியவர். அவரது சமூகப் பணிகளையும், அரும்பணிகளையும் போற்றும் வகையில் அமைக்கப்பட்ட நூற்றாண்டு நினைவரங்கம் திறக்கப்பட்டு ஓராண்டுக்கும் மேலாகியும் இதுவரை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. அதிகாரிகளின் அலட்சியத்தால் நினைவரங்கம் தொடர்ந்து மூடப்பட்ட நிலையில் உள்ளது.
எனவே, ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பயனளிக்கும் வகையில் நினைவரங்கத்தை உடனடியாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இந் நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் நந்தனார் கல்விக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் பிரபுதாஸ், தமிழக வெற்றி கழக நிர்வாகி கலியபெருமாள், சமூக ஆர்வலர் ஆசிய ஜோதி, பாலசிங்கம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் பாக்கா செல்லப்பன் மாவட்ட செயலாளர் தமிழ் வளவன் முன்னாள் மாவட்ட செயலாளர் அறவாழி உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
