டெஹ்ரான்: ஆக்கிரமிப்பாளர்கள் வருந்தும் வரையிலும், ஈரானின் உரிமைகள் பாதுகாக்கப்படும் வரையிலும், ஈரான் தனது எதிர்ப்பை வலிமையுடன் தொடரும் என்று அதிபர் மசூத் பெஷெஷ்கியன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான மோதல்களால் சேதமடைந்த ராணுவ கட்டமைப்பை மீட்டெடுக்க ஈரான் முயன்று வருவதுடன், தன் ஆதரவு அமைப்புகளுடன் சேர்ந்து கூட்டு பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க ராணுவம் அதிரடித் தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்நிலையில் தாக்குதல் நடத்திவரும் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்து ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஈரான் அரசு எப்போதும் போரை எதிர்த்து வந்துள்ளது; மோதல்களைத் தூண்டுவதைத் தவிர்ப்பதிலேயே மக்களின் நலன்களும் பிராந்தியப் பாதுகாப்பும் அடங்கியுள்ளதாகக் கருதி வருகிறது.
இருப்பினும், ஆக்கிரமிப்புக்கு எதிராக இன்றுவரை அது எவ்வாறு துணிச்சலுடன் எதிர்த்து வருகிறதோ, அதேபோல ஆக்கிரமிப்பாளர்கள் முழுமையான வருத்தமடையும் நிலைக்குத் தள்ளப்படும் வரை தனது எதிர்ப்பை முழு வலிமையுடன் தொடரும்; மேலும், மாபெரும் ஈரானியத் தேசத்தின் உரிமைகளைப் பாதுகாக்கும் அரணாகவும் திகழும். இவ்வாறு அதிபர் மசூத் பெஷெஷ்கியன் கூறியுள்ளார்.
