தனியார் பள்ளி பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் தரகம்பட்டி பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் இப்பள்ளியில், இன்று காலை வழக்கம் போல் கடவூர், பாலவிடுதி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து மாணவர்களை அழைத்துக் கொண்டு பள்ளி பேருந்து பள்ளிக்கு வந்துக் கொண்டிருந்தது.
அப்போது எதிரே தீவணங்கள் ஏற்றி வந்த கனரக வாகனமான லாரி ஒன்று பள்ளி பேருந்து மீது நேருக்கு நேராக மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். அதில் ஜன்னல் ஓரமாக அமர்ந்து வந்திருந்த 4 மாணவிகளுக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பாலவிடுதி காவல்துறையினர் காயமடைந்த மாணவர்களை உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மணப்பாறை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
