ரவுடியை பிடிக்க முயன்ற போலீஸ் மீது தாக்*குதல் : துப்பாக்கியைக் கையில் எடுத்த போலீசார்!

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அடுத்துள்ள சிக்கனம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 55). இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நிலக்கோட்டை அருகே உள்ள என்.கோவில்பட்டியில் தனது உறவினர் வீட்டில் ராஜா தங்கியிருப்பதாகவும், அந்தப் பகுதியில் ஒருவரைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, நிலக்கோட்டை துணைக் காவல் கண்காணிப்பாளர் இளஞ்செழியன் தலைமையில் தனிப்படை போலீசார் என். கோவில்பட்டிக்குச் சென்று ராஜாவை பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது, போலீசாரைக் கண்ட ராஜா அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து அவரைப் பிடிக்க போலீசார் விரட்டிச் சென்றபோது, சிறப்பு தனிப்படை சார்பு ஆய்வாளர் அருண் பிரசாத்தை அரிவாளால் வெட்டிவிட்டு ராஜா தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னர், அருகிலிருந்த தென்னந்தோப்புக்குள் சென்று அவர் பதுங்கியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, ராஜாவை சுற்றிவளைத்த போலீசார் அவரை சரணடையுமாறு எச்சரித்துள்ளனர். ஆனால், அவர் தொடர்ந்து தப்பிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால், போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ராஜாவின் காலில் குண்டு பாய்ந்ததாகவும், அதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் காயமடைந்த சார்பு ஆய்வாளர் அருண் பிரசாத் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ராஜா ஆகிய இருவரும் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு  விரைந்து சென்ற திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார். பிரபல ரவுடியை கைது செய்ய முயன்ற காவல்துறை சார்பு ஆய்வாளரை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பிக்க முயன்றவரை, போலீசார் சுற்றிவளைத்து துப்பாக்கிச்சூடு நடத்திப் பிடித்த சம்பவம் திண்டுக்கல் பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Source link