வாஷிங்டன்: எச்1 பி விசா வைத்திருப்பவர்கள் வேலை இழந்த பிறகு, அமெரிக்காவில் தங்குவதற்கான 60 நாள் சலுகைக் காலத்தை முற்றிலுமாக ரத்து செய்ய அதிபர் டிரம்ப் நிர்வாகம் முன்மொழிந்துள்ளது.
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், அந்நாட்டவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நோக்கில், ‘எச் – 1 பி’ விசா நடைமுறைகளில் கடுமை காட்டினார். அந்த விசா பெறுவதற்கான விண்ணப்பக் கட்டணத்தையும் பல மடங்கு உயர்த்தினார். இதையடுத்து, ‘எச் – 1 பி’ விசாவுக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனால் பல்வேறு மாற்றங்களை அதிபர் டிரம்ப் மேற்கொண்டு வருகிறார்.
அந்தவகையில், எச்1 பி விசா வைத்திருப்பவர்கள் வேலை இழந்த பிறகு, அமெரிக்காவில் தங்குவதற்கான 60 நாள் சலுகைக் காலத்தை முற்றிலுமாக ரத்து செய்ய அதிபர் டிரம்ப் நிர்வாகம் முன்மொழிந்துள்ளது. அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை இதற்கான புதிய விதிமுறைகளை அறிவிப்பாக வெளியிட்டு இருக்கிறது; எச்1 பி விசா மற்றும் சில தற்காலிக விசாக்களைக் கொண்ட வெளிநாட்டு ஊழியர்கள் தங்கள் வேலை இழந்த அடுத்த நாளே அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் அல்லது சட்டப்பூர்வமாகத் தங்குவதற்கான மாற்று வழிகளை உடனடியாகச் செய்ய வேண்டும்.
வேலை வாய்ப்புகள் அமெரிக்க குடிமக்களுக்கே கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், சட்டப்பூர்வ குடியேற்றங்களை முறைப்படுத்தவுமே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 2017ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த இந்த 60 நாள் சலுகை காலம், வேலையை இழந்தால் ஊழியர்கள் புதிய வேலை தேட உதவியாக இருந்தது; இந்த புதிய மாற்றம் இன்னும் சட்டமாக அறிவிக்கப்படவில்லை. இந்த அறிவிப்பு குறித்து 60 நாட்கள் மக்களின் கருத்துக்கள் கேட்கப்படும்; அதன் பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும்.
எச்1 பி இந்த விசாவால் அதிகம் இந்தியர்கள் பயனடைந்து வருகின்றனர். ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விசாக்களில் கடந்தாண்டு 70 சதவீதம் விசாக்களை இந்திய வல்லுனர்கள் பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது அதிபர் டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ள இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்தால் அமெரிக்க தொழில்நுட்பம் மற்றும் சேவைத் துறை முழுவதும் பணிபுரியும் இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
