“கலங்கி நிற்கிறேன்… ஒரே இருளாக இருப்பது போல இருக்கிறது" – கண்ணீருடன் பாரதி பாஸ்கர்

பிரபல தமிழ் அறிஞரும், பிரபல பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா அவர்களின் திடீர் மறைவு தமிழ் உலகையும், அவரது ரசிகர்களையும் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு வயது 90.

மதுரை திருமங்கலம் அருகேயுள்ள சாத்தங்குடி கிராமத்தில் பிறந்த பாப்பையா படிக்கும் காலத்திலேயே மேடைகளில் மாணவராகப் பேசத் தொடங்கினார். படிப்பு முடித்து அமெரிக்கன் கல்லூரியில் பேராசிரியராகப் பணியைத் துவக்கிய இவரிடம் படித்த பலர் பின்னாளில் சினிமா, எழுத்து எனப் பல தளங்களில் ஆளுமைகளாக வலம் வருகின்றனர்

ராஜா, பாரதி பாஸ்கர்

குறிப்பாக விழாக்காலங்களில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பட்டிமன்றம் மூலம் பட்டிதொட்டியெங்கும் தமிழையும், தமிழர் பாரம்பரியத்தையும் கொண்டுச் சேர்த்தார். சாலமன் பாப்பையா என்றால் அவருக்கு இரு கரங்களாக வலம் வந்தவர்கள் பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா – பாரதி பாஸ்கர்.

சாலமன் பாப்பையா மறைவு குறித்து நம்மிடம் பேசிய பேச்சாளர் பாரதி பாஸ்கர், “ரொம்ப கலங்கி நிற்கிறேன். ஒரே இருளாக இருப்பது போல இருக்கிறது. என்னால இதை நம்பவே முடியவில்லை. ஐயாவுடன் என் பயணம் தொடங்கி இது 25-வது ஆண்டு.

நான்கு நாளுக்கு முன்புதான் அவரை சந்தித்தேன். ஆரோக்கியமாக இருந்தார். அவருக்கு எந்த உடல்நலப் பிரச்னையும் இல்லை. திடீரென வந்த மாரடைப்பால் அவர் நம்மிடமிருந்து விடைபெற்றுக்கொண்டார்.

ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதூர்த்திக்கு பழைய பட்டிமன்றத்தில் ஒன்றை எடுத்து மறு ஒளிபரப்பு செய்வார்கள்.

சாலமன் பாப்பையா
சாலமன் பாப்பையா

இந்த விநாயகர் சதூர்த்திக்கு புதிதாக படப்பிடிப்பு நடத்த வேண்டும் என முடிவு செய்தார்கள். அதற்காக சிவகாசியில் நான்கு நாள்களுக்கு முன்னாள் பட்டிமன்றம் நடத்தி படப்பிடிப்பு முடிந்தது. அப்போதும் அவர் ஆரோக்கியமாக இருந்தார். நன்றாக சாப்பிட்டார். அன்று பிரமாதமாகப் பேசினார். பட்டிமன்றமும் சிறப்பாக அமைந்தது. ஆனால், இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்கும் என எதிர்பார்க்கவில்லை.” எனக் கலங்கியபடியே ஈடுசெய்ய முடியாத இழப்பு குறித்து பேசிமுடித்தார்.

Source link