சாலமன் பாப்பையா: "செப்டம்பர் 11 தமிழுக்கு நல்லநாள் இல்லை போலும்..!" – கவிஞர் வைரமுத்து உருக்கம்

பட்டிமன்றம் மூலம் மக்கள் மனதைக் கவர்ந்த சாலமன் பாப்பையா உடல்நலக் குறைவால் இன்று (செப்.11) காலமானார். அவருக்கு வயது 90. அவரது மறைவிற்கு பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் கவிஞர் வைரமுத்து வெளியிட்டிருக்கும் இரங்கல் பதிவில், “சாலமன் பாப்பையாவின் மறைவு உள்ளத்தை உடைக்கிறது. பாரதி மறைந்தநாளில் பாப்பையாவும் மறைந்திருக்கிறார். செப்டம்பர் 11 தமிழுக்கு நல்லநாள் இல்லை போலும். பட்டிமன்றத் தமிழ் முடிந்துவிட்டதா?

பாமரத் தமிழ் மூச்சை நிறுத்திக்கொண்டதா? கல்லூரிகளில் பயிற்றுவித்த தமிழைக் கடைவீதிக்குக் கொண்டுசேர்த்தவர் சாலமன் பாப்பையா.

வைரமுத்து

‘ இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்’ நூலில் அவர்குறித்தும் எழுதியிருக்கிறேன்.

சிரிக்க வைத்துச் சிந்திக்கவும் வைத்த மேடைக் கலைவாணர் மறைந்துவிட்டார் அவரது நாற்காலி காலியாகவே இருக்கும்.

நிரப்ப முடியாது மதுரைக்கே ஒரு வெறுமை வந்துவிட்டது. மனம் கலங்குகிறது அவரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கும் உலகத் தமிழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்” என்று உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார்.

இதனைத்தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் வெளியிட்டிருக்கும் பதிவில், “மதிப்பிற்குரிய சாலமன் பாப்பையா அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு மிகுந்த மனவேதனை அடைகிறேன். அவர் மாபெரும் தமிழறிஞராகவும் சிறந்த சொற்பொழிவாளராகவும் திகழ்ந்தார். ஒவ்வொரு தமிழ் பண்டிகையின் போதும் அவருடைய பட்டிமன்ற நிகழ்ச்சிகளைப் பார்த்து மகிழ நான் எப்போதும் ஆவலுடன் காத்திருப்பேன்.

இயக்குநர் ஷங்கர்
இயக்குநர் ஷங்கர்

அவருடைய அற்புதமான நகைச்சுவை உணர்வு, சமயோசித அறிவு மற்றும் சிந்தனையைத் தூண்டும் தீர்ப்புகளை இனி தவறவிடப் போகிறோம் என்பதை நினைக்கும் போது உண்மையிலேயே நெஞ்சம் கனக்கிறது. தமிழ் மொழிக்கும் பண்பாட்டிற்கும் அவர் ஆற்றிய பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும்.

அந்த நல்ஆன்மாவிற்கு என் மனமார்ந்த பிரார்த்தனைகள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

Source link