ஸ்ரீநகர்: ”தேசிய பாடலான வந்தே மாதரத்துக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில், அப்பாடலை அவமதித்து காஷ்மீரிகள் சிறை செல்ல வேண்டும் என காங்., விரும்புகிறதா?” என, தேசிய மாநாட்டு கட்சியைச் சேர்ந்த ஜம்மு – காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கேள்வி எழுப்பி உள்ளார்.
‘அரசு நிகழ்ச்சிகளில், வந்தே மாதரத்தின் அனைத்து பத்திகளையும் கட்டாயம் பாட வேண்டும்’ என, மத்திய பா.ஜ., அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் காங்., முரண்டு பிடிக்கிறது. ‘வந்தே மாதரத்தின் முதலிரண்டு பத்திகளை மட்டுமே பாடுவோம்’ என, அக்கட்சி அடம் பிடிக்கிறது.
யூனியன் பிரதேசமான ஜம்மு – காஷ்மீரில், முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில், தேசிய மாநாட்டு கட்சியின் ஆட்சி நடக்கிறது. இக்கட்சியுடன், காங்., கூட்டணியில் உள்ளது; எனினும், அமைச்சரவையில் காங்., இடம்பெறவில்லை.
ஸ்ரீநகரில், ஜம்மு – காஷ்மீர் சர்வதேச திரைப்பட விழா சமீபத்தில் நடந்தது. இதில், வந்தே மாதரம் பாடல் முழுமையாக பாடப்பட்டது. இதற்கு, கூட்டணி கட்சியான காங்., எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில், ஜம்மு – காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா நேற்று கூறியதாவது: வந்தே மாதரம் பாடலுக்கு சட்டம் இயற்றப்பட்டு, சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளது. இதன்படி, அப்பாடலை அவமதிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். பாடலின் அனைத்து பத்திகளையும் பாட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இது, ஜம்மு — காஷ்மீருக்கு மட்டும் அல்ல; ஒட்டுமொத்த நாட்டுக்கும் பொருந்தும். இதை மீறினால், தண்டனைக்கு ஆளாவது உறுதி. அப்படி இருக்கையில், காங்., அவமதிப்பதை போலவே, வந்தே மாதரம் பாடலை காஷ்மீரிகள் அவமதித்து, சிறை செல்ல வேண்டும் என, அக்கட்சி விரும்புகிறதா? இவ்வாறு அவர் கூறினார்.
