புதுடில்லி: நம் நாட்டில், 14 வயதுக்கு உட்பட்ட சிறுமியருக்கு புற்றுநோய் வராமல் தடுக்கும் நோக்கில், அவர்களுக்கு எச்.பி.வி., எனப்படும் ‘ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்’ தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் கீழ், தடுப்பூசி செலுத்தியோரின் எண்ணிக்கை, 80 லட்சத்தை கடந்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.
பெண்களை பாதிக்கும் கர்ப்பப்பை வாய் உட்பட அதன் தொடர்புடைய புற்றுநோய்கள் வராமல் தடுக்கும் வகையில், எச். பி.வி., தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை பிரதமர் மோடி, கடந்த பிப்ரவரி 28ம் தேதி துவக்கி வைத்தார். இத்திட்டம், 14 வயது சிறுமியரை இலக்காகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மதிப்பீடு
இவ்வகை புற்றுநோய்களைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் தடுப்பூசியை, நாடு முழுதும் உள்ள முதன்மை சுகாதார நிலையங்கள், மாவட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றில் செலுத்தும் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த மையங்களில், ‘கார்டசில் – 4’ என்ற ஒற்றை ‘டோஸ்’ தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது. எனினும், இத்தடுப்பூசி செலுத்த, பெற்றோரின் அனுமதி கட்டாயம். இத்திட்டத்தின் மூலம், 1.20 கோடி சிறுமியர் பயனடைவர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எட்டப்பட்ட இலக்கு
இதற்கிடையே, இந்தத் தடுப்பூசி செலுத்தியோரின் எண்ணிக்கை, 80 லட்சத்தை கடந்து சாதனை படைத்துள்ளது. உத்தர பிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் போன்ற மாநிலங்கள் தங்களின் இலக்கை 100 சதவீதம் எட்டி உள்ளதாக மத்திய சு காதாரத்துறை தெரிவித்து உள்ளது.
பீஹார், ஆந்திரா, அசாம் ஆகிய மாநிலங்கள், தடுப்பூசி செலுத்துவதில் 90 சதவீத இலக்கை எட்டியுள்ளதாகவும், தமிழகம், கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் 60 சதவீதத்திற்கும் மேல் இலக்கை அடைந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
