புதுடில்லி: வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளிடையே உறவை வலுப்படுத்த இந்தியா முயற்சி செய்து வரும் நிலையில், பிரிக்ஸ் கூட்டமைப்பை மிகச் சிறப்பாக வழிநடத்த முடியும் என ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
தலைநகர் டில்லியில் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டை இந்தியா நடத்துகிறது. செப்.12 மற்றும் செப்.13 தேதிகளில் நடைபெறுகிற இந்த மாநாட்டில் உலக நாடுகளின் முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளதால் டில்லி விழாக்கோலம் பூண்டுள்ளது. டில்லி வந்துள்ள ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி இந்தியாவின் தலைமைத்துவத்தை பாராட்டியுள்ளார்.
டில்லியில் நிருபர்களிடம் அப்பாஸ் அராக்சி கூறியதாவது: தற்போது பிரிக்ஸ் அமைப்பிற்குத் தலைமை தாங்கும் இந்தியாவை, நாங்கள் ஒரு சிறந்த வளர்ந்து வரும் நாடாகக் கருதுகிறோம்; இந்தியா, பிரிக்ஸ் குழுவையும் அதன் உறுப்பு நாடுகளையும் மிகச் சிறப்பாக வழிநடத்தும் திறன் கொண்டது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
பிரிக்ஸ் தற்போது ஒரு மிக முக்கியமான அமைப்பாக பங்காற்றி வருகிறது. இந்தியா பிரிக்ஸ் அமைப்பிற்குத் தலைமை தாங்குவதை ஈரான் வரவேற்கிறது. உறுப்பு நாடுகள் இடையே வர்த்தகம் செய்ய வேண்டும் என்பதில் பிரிக்ஸ் உறுப்பினர்கள் உறுதியாக உள்ளனர். இவ்வாறு அப்பாஸ் அராக்சி கூறினார்.
