மதுராந்தகத்தில் மாஸ் காட்ட போவது யார்? தாராபுரத்தை தட்டித் தூக்குமா தவெக? 2026 தேர்தல் ப்ளாஷ்பேக்!

சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிந்து ஆட்சியைப் பிடித்து கிட்டத்தட்ட 130 நாட்களை கடந்து விட்டது தமிழக வெற்றி கழகம். நடிகர் விஜய் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு அவருக்கு முக்கியமான சோதனை காத்திருக்கிறது. அதுதான் 2 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல். அதுவும் கடந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் தான் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் இந்த இரு தொகுதிகளில் யாருக்கு செல்வாக்கு அதிகம்? அதிமுகவிடமிருந்து தொகுதிகளை தமிழக வெற்றி கழகம் கைப்பற்றுமா? திமுகவுக்கு இங்கு இருக்கும் வாக்கு வங்கி என்ன? என்பது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்..

2026 சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் ஆட்சி அமைந்தது. ஆனால் ஆட்சி அமைந்த தொடக்கத்திலேயே பல்வேறு அரசியல் விமர்சனங்களையும் சவால்களையும் விஜய் அரசு எதிர்கொண்டது.

குறிப்பாக, ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்காததால் ஏற்பட்ட குழப்பம் மற்றும் அதிமுக, அமமுக எம்.எல்.ஏ.க்களுடனான குதிரை பேரம் தொடர்பான குற்றச்சாட்டுகள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தின.

தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் காரணமாக திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் விஜய் அரசுக்கு ஆதரவு அளித்தன. இதன் மூலம் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை உறுதி செய்யப்பட்ட நிலையில், சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பும் பரபரப்பாக பேசப்பட்டது.

அதிமுகவைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாக கூறப்பட்ட நிலையில், அதிமுகவைச் சேர்ந்த சில எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். முதலில் திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றிருந்த விஜய் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பெருந்துறை தொகுதி எம்எல்ஏ ஜெயக்குமார், மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதி எம்எல்ஏ சத்யபாமா, அம்பாசமுத்திரம் தொகுதி எம்எல்ஏ இசக்கி சுப்பையா, கரூர் தொகுதி எம்எல்ஏ எம்.ஆர். விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி எம்எல்ஏ சி. விஜயபாஸ்கர் ஆகியோரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.

ஒரு சட்டசபைத் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டால், 6 மாத காலக்கெடுவுக்குள் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பது தேர்தல் விதியாகும். ஆனால் சில தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் காரணமாக அவற்றுக்கு இன்னும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. தற்போது மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல், பரிசீலனை, வாபஸ் பெறும் காலம் மற்றும் இறுதி வேட்பாளர் பட்டியல் உள்ளிட்ட தேர்தல் பணிகள் செப்டம்பர் மாதத்திலேயே நடைபெற உள்ளன. 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ளது. இந்த இரு தொகுதிகளில் யாருக்கு செல்வாக்கு அதிகம்? அதிமுகவிடமிருந்து தொகுதிகளை தமிழக வெற்றி கழகம் கைப்பற்றுமா? திமுகவுக்கு இங்கு இருக்கும் வாக்கு வங்கி என்ன? என்பது தான் தற்போது அரசியல் களத்தில் மிகப் பெரிய கேள்வி.

மதுராந்தகம் தனித் தொகுதியில் கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பில் மரகதம் குமரவேல் போட்டியிட்டு வெற்றி பெற்றார். திமுக சார்பில் அமலு பொன்மலர், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் எழில் கேத்தரின், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் ஆகியோர் போட்டியிட்டனர். மொத்தமாக சுமார் 1.96 லட்சம் வாக்குகள் பதிவான நிலையில், அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் சுமார் 69 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

ஆனால் தவெகவுக்கும் திமுகவுக்கு மிகப்பெரிய வித்தியாசம் இல்லை. தவெக வேட்பாளர் எழில் சுமார் 62 ஆயிரம் வாக்குகளையும், திமுக வேட்பாளர் அமலு பொன்மலர் சுமார் 59 ஆயிரம் வாக்குகளையும் பெற்றனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகிராமன் சுமார் 4,950 வாக்குகளைப் பெற்றார். இதனால் மதுராந்தகத்தில் அதிமுக வெற்றி பெற்றிருந்தாலும், தவெக மற்றும் திமுக இரு கட்சிகளுமே கணிசமான வாக்குகளை பெற்றிருந்தன என்பதையும் கவனிக்க வேண்டும்.

தாராபுரம் தனித் தொகுதியிலும் கடந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் சத்யபாமா வெற்றி பெற்றிருந்தார் என்பதையும் கவனிக்க வேண்டு. அவரை எதிர்த்து திமுக சார்பில் இந்திராணி, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கௌரி சித்ரா, நாம் தமிழர் கட்சி சார்பில் திவ்யா ஆகியோர் போட்டியிட்டனர். சுமார் 1.99 லட்சம் வாக்குகள் பதிவான இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் சத்யபாமா சுமார் 81 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் இந்திராணி சுமார் 64 ஆயிரம் வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தார். தவெக வேட்பாளர் கௌரி சித்ரா சுமார் 46 ஆயிரம் வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திவ்யா 6,026 வாக்குகளையும் பெற்றார்.

இதிலும் அதிமுகவுக்கு கணிசமான வாக்கு வங்கி இருப்பது கவனிக்கத்தக்கது. தற்போது இந்த இரு தொகுதிகளிலும் மிகவும் பரபரப்பாக பேசப்படும் விஷயம், கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகிய இருவரும் இந்த முறை தவெக சார்பில் போட்டியிடுவது தான்.
இருவருக்கும் தங்களது தொகுதிகளில் ஏற்கனவே அறிமுகமும் தனிப்பட்ட செல்வாக்கும் இருப்பதாக கூறப்படுகிறது.

அவர்களது சொந்த வாக்கு வங்கியுடன் தவெகவின் வாக்குகளும் இணைந்தால் அது அவர்களுக்கு சாதகமாக அமையலாம் என்ற கணக்கை தான் விஜய் போட்டு வைத்துள்ளார் என்கின்றனர் நண்பா நண்பீஸ். ஆனால் அ துஅவ்வளவு எளிதானது அல்ல.

எதிர்க்கட்சியான திமுக இடைத்தேர்தலை புறக்கணிக்கலாம் என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் நிலவிய நிலையில், மதுராந்தகத்திற்கு பரந்தாமணையும், தாராபுரத்துக்கு சுகன்யாவையும் வேட்பாளர்களாக திமுக அறிவித்துள்ளது. திமுக களத்தில் இறங்கியுள்ளதால் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டி மேலும் கடுமையாகியுகும். கடந்த தேர்தலிலேயே இந்த இரண்டு தொகுதிகளிலும் திமுக கணிசமான வாக்குகளை பெற்றிருப்பதால் தவெகவின் வெற்றி அவ்வளவு எளிதானது அல்ல.

அதே நேரத்தில்,இரண்டு தொகுதிகளிலும் அதிமுகவுக்கு பாரம்பரியமாக வாக்கு வங்கி உள்ளது. குறிப்பாக இரட்டை இலை சின்னத்துக்கு இருக்கும் வாக்குகள் இடைத்தேர்தலில் நிச்சயம் முக்கியமான காரணையாக இருக்கும். ஒருபக்கம் ஆளும் கட்சியான தவெக தனது முதல் இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும். மறுபக்கம், அதிமுக தனது பாரம்பரிய வாக்கு வங்கியை தக்க வைத்துக்கொள்ள போராடும். நாம் தமிழர் கட்சி தான் என்ன செய்யப் போகிறது எனத் தெரியவில்லை.