சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பல இடங்களில் ஆங்காங்கே மின்வெட்டு ஏற்பட்டது. இந்த திடீர் மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். இதற்கிடையே மின்வெட்டுக்கு என்ன காரணம் என்பதை விளக்கியுள்ள தமிழ்நாடு அரசு, அதை சரி செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பொதுவாக கோடை காலத்தில் தான் மின் பயன்பாடு உச்சம் தொடும். இதனால் அந்த காலகட்டத்தில் மின்பற்றாக்குறை ஏற்பட்டு, ஆங்காங்கே மின்வெட்டு ஏற்படும். ஆனால், இப்போது செப்டம்பர் மாதத்திலும் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. பல மணி நேரம் வரை கூட ஒரு சில இடங்களில் மின்வெட்டு நீடிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.
சில இடங்களில் மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விளக்கம் கொடுத்துள்ளது. நீடித்த கோடை வெப்பத்தால் அதிகரிக்கும் மின் தேவையை சமாளிக்க கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதாகவும் சீரான மின் விநியோகத்தை உறுதி செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்த ஆண்டு கோடைக்காலம் எதிர்பாராத வகையில் நீடித்ததன் காரணமாக, மின்சாரத் தேவையும் அதிகரித்துள்ளது. அதேவேளையில், காற்றின் வேகம் குறைந்ததால் காற்றாலை மின் உற்பத்தியும் எதிர்பார்த்த அளவிற்கு கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக சில நேரங்களில் மின்னழுத்தக் குறைபாடு போன்ற தொழில்நுட்ப பிரச்சினைகள் ஏற்பட்டன.
இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மின்சார வாரியம் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் வெளிச்சந்தையில் இருந்து கூடுதலாக 2000 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் தற்போது மின் தொகுப்பின் நிலைமை சீராகவும், நம்பகத்தன்மையுடனும் உள்ளது. மேலும், மின் கட்டமைப்பு மாறுபாடுகள் மற்றும் மின் விநியோக நிலைமையை தொடர்ந்து மின்வாரிய தலைமையகத்தில் உயர்மட்ட அலுவலர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து, உடனுக்குடன் உரிய உத்தரவுகள் வழங்கி வருகிறது.
மின் விநியோக பாதிப்புகளை உடனடியாக சரிசெய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் சிறப்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு, மின்தடை ஏற்பட்ட பகுதிகளில் உடனடியாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு மின் விநியோகம் சீரமைக்கப்பட்டு வருகிறது. மின்தடை ஏற்படும் நிகழ்வுகளை எந்தவித அலட்சியமும் இன்றி உடனடியாக சரிசெய்ய வேண்டும் என களப்பணியில் உள்ள அனைத்து அலுவலர்களுக்கும் ஏற்கனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, வழக்கமான பராமரிப்புப் பணிகளுக்காக திட்டமிடப்பட்ட மின்தடைகளை இயன்றவரை தவிர்க்கவும் களப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு நாள் முழுவதும், குறிப்பாக இரவு நேரங்களிலும், சீரான, நம்பகமான மற்றும் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் தொடர்ந்து விழிப்புடன் செயல்பட்டு வருகிறது.
மேலும், மின் நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் மின்சாரத்துறை சார்ந்த புகார்களுக்கு, 24 மணி நேரமும் இயங்கும் நுகர்வோர் சேவை மையமான ‘மின்னகம்’-ஐ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
