சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் திமுக சார்பில் நடத்தப்பட்டது. அந்த வகையில் சைதாப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமாரின் தாயாரை குறிப்பிட்டு பேசியது கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த நிலையில் ஆ.ராசா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் மிசாவில் தான் கைது செய்யப்பட்டாரா என்பதற்கான முறையான ஆதாரம் இல்லை “Detention Copy” இல்லாத தியாகி திமுக தலைவர் ஸ்டாலினாக தான் இருப்பார், மிசா குறித்து மீண்டும் மீண்டும் பேசினால் திமுகவினருக்கு தான் அழிவு என தமிழக சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் கூறியிருந்தார்.
இந்நிலையில், கலைஞர், முரசொலி மாறன், மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை சட்டமன்றத்தில் கொச்சைப்படுத்தி பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜையை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அந்த வகையில், சென்னை சைதாப்பேட்டையில் திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் மா சுப்பிரமணியன், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது பேசிய ஆ.ராசா முதல்வர் விஜய் குறித்தும் அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் குறித்தும் மிகக் கடுமையாக பேசினார்.
குறிப்பாக அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமாரின் பிறப்பை குறிப்பிட்டு திமுக துணை பொது செயலாளர் எம்பியுமான ஆ.ராசா பேசியது சர்ச்சைக்கு உள்ளானது. இதை அடுத்து பலரும் ஆ.ராசாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திமுக கூட்டணியில் இருக்கும் கருணாஸ் உள்ளிட்டோரும் ஆ ராசாவின் பேச்சை கண்டித்துள்ளனர்.
இந்த நிலையில் ஆ.ராசா பேச்சு கண்டனத்திற்குரியது எனவும் திமுகவினர் தொடர்ந்து அத்துமீறி வருவதாக கூறியுள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரான பெ சண்முகம். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா அவர்கள் பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது. திமுக தலைவர்களில் சிலர் தொடர்ந்து பெண்களை கொச்சைப்படுத்தி பேசுவதும் அதைக் கேட்டு தொண்டர்கள் ஆர்ப்பரிப்பதும் சகிக்க முடியவில்லை. அமைச்சர் நிர்மல் குமார் பேசியதை கண்டியுங்கள்.
அவருடைய தாயாரை இழிவு படுத்துவதை எப்படி திமுக தலைவர் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். பொதுவெளியில் பெண்களை இழிவு படுத்தி பேசுபவர் யாராக இருந்தாலும் அந்தந்த கட்சி தலைமை கண்டிக்கவும், ஒழுங்குபடுத்தவும் முன்வர வேண்டும். சில திமுகவினர் “கண்ணியம்” தவறுவது தொடர்கிறது. “கட்டுப்பாடு” நிலை நிறுத்தும் “கடமை”யை திமுக. தலைவர் செய்வார் என்று நம்புகிறேன்.” என கூறியுள்ளார்.
