நெல்லை: யாருக்கு ஆதரவு என்பதை கம்யூனிஸ்டுகள் உறுதியான நிலைப்பாடாக அறிவிக்க வேண்டும் இல்லையென்றால் அது சந்தர்ப்பவாத அரசியலாக மாறிவிடும் எனவும், தமிழக முதலமைச்சர் முதலீடுகளை ஈர்க்கத்தான் வெளிநாடு சென்றாரா? என்பது பெரிய கேள்வி குறி.. எதற்காக சென்றார்? எத்தனை முதலீட்டாளர்களை சந்தித்தார்? என்பதை தமிழக வந்தவுடன் அவர் கட்டாயம் விளக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,” தமிழக சட்டமன்ற நடவடிக்கைகளை வேடிக்கையாகவும் விந்தையாகவும் பொதுமக்கள் பார்க்கின்றனர். இத்தனை ஆண்டுகள் சட்டமன்றம் எப்படி நடந்தது.
தற்போது அதன் மாண்பு, அதன் வரலாறு என்பதையெல்லாம் பார்க்கும்போது, பல்வேறு சபாநாயகர்களைக் கடந்து பல இன மக்களை, மத மக்களை சபாநாயகர், அமைச்சராகப் பணியாற்றிய காலம் போய், மதம் சார்ந்த சபாநாயகர், மதம் சார்ந்த அமைச்சர்களை சட்டமன்றத்தில் பார்க்கும் நிலை உருவானது.
இதை நயினார் நாகேந்திரன் சொன்னால் தவறாக அனைவரும் பார்க்கிறார்கள். இது பொதுவான பார்வையாக உள்ளது. சட்டமன்றத் தேர்தல் நடக்கும் போது அளித்த வாக்குறுதிகளுக்காக சட்டமன்றம் சென்றவர்களையும் மக்கள் பார்க்கிறார்கள். சட்டமன்ற நடவடிக்கைகளுக்கு பலர் ஆதரவாகவும், பலர் எதிர்ப்பாகவும் உள்ளனர். இன்றைய சூழலில் இரண்டு இடைத்தேர்தல்கள் நடக்க உள்ளன. இன்னும் நான்கு இடைத்தேர்தல்கள் நடக்க உள்ளன.
ஒரு சட்டமன்றப் பொதுத்தேர்தல் முடிந்து மூன்று மாதங்களுக்குள்ளாகவே சட்டமன்ற இடைத்தேர்தல் வருவது குதிரை பேரம் நடந்ததாகவே அனைவரும் சொல்கிறார்கள். இந்தக் குதிரை பேரம் எதற்காக நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். சட்டமன்றத்தில் ஒவ்வொரு குடும்பத்தைப் பற்றி மட்டுமே பேசியுள்ளனர். பைபிள் வசனம், உறவினர்களைப் பற்றி பேச்சு போன்றவை தான் நடந்துள்ளது. இது ஏற்புடையதா என்பதை பொதுமக்கள் தான் சொல்ல வேண்டும்.தமிழக முதலமைச்சர் லண்டன் பயணம் மேற்கொண்டுள்ளார்.
சொந்த வேலையாகச் சென்றுள்ளாரா அல்லது யாருடன் சென்றுள்ளார் என்பது தெரியாது. அரசு செலவில் யார் யார் சென்றார்கள் என்பது தெரியாது. உண்மையிலேயே முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காகச் சென்றாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. மூன்று நாட்களில் எத்தனை முதலீட்டாளர்களைச் சந்திக்க முடியும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. சொந்த வேலையாகச் சென்றால் யாரும் ஒன்றும் சொல்ல முடியாது.
முதலீட்டாளர்களை ஈர்க்கச் சென்றார் முதல்வர் என்றால், அவர் வந்தவுடன் முதலீட்டாளர்கள் ஈர்ப்பு குறித்து விளக்க வேண்டும்.தமிழக முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் தவறானது கிடையாது. நான்கு நாட்கள் மட்டுமே வெளிநாட்டில் இருக்கிறார். எத்தனை பேரை அவர் சந்திக்க முடியும் என்பது தெரியவில்லை. தமிழகம் திரும்பியவுடன் முதலீட்டாளர்கள் குறித்த அறிவிப்பை அவர் வெளியிட வேண்டும்.கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அல்லது எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டை உறுதியாக எடுக்க வேண்டும்.
ஏதாவது ஒரு காரணத்திற்காக ஆதரவைச் சொல்லிவிட்டு, வெளியே இருக்கிறோம் என்கிறார் விஜய். யாருக்கோ கம்யூனிஸ்டுகள் ஆதரவு அளிப்பதை உறுதியான நிலைப்பாடாக அறிவிக்க வேண்டும். இல்லை என்றால் அது சந்தர்ப்பவாத அரசியலாக மாறிவிடும்.நான் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் காலத்தில் தொழில்துறை அமைச்சராக இருந்தபோது, மோட்டோரோலா, நோக்கியா, பாக்ஸ்கான், ஏசியன் பெயிண்ட்ஸ், டெல், ஐடெல், பயோ பார்க், அசண்டாஸ் ஐடி பார்க் எனப் பல தொழில் நிறுவனங்கள் கொண்டாடப்பட்டது.
டிசிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கம்பெனிகளுக்கு சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இடம் வழங்கப்பட்டது. முதலீட்டாளர்களை ஈர்ப்பது அனைத்தும் தொழில்துறை அமைச்சர்தான் செய்ய வேண்டும். இப்போது முதலமைச்சர் தொழில் முதலீட்டைத் திரட்டச் சென்றுள்ளார். யாரைப் போய்ப் பார்க்கப் போகிறாரோ, என்ன செய்யப் போகிறாரோ என்பது அவர் வெளிப்படையாகச் சொன்னால்தான் தெரியும்.” என்றார்.
