நேற்று மாதிரியே.. இன்னைக்கும் மழைக்கு வாய்ப்பு! எங்கெல்லாம் பெய்யும்? வெதர்மேன் கொடுத்த அப்டேட்!

சென்னை: தமிழகத்தின் உள் மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்திருந்தது. இந்நிலையில், இன்றும் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, “நேற்று வட தமிழகத்தின் உட்புற மாவட்டங்களுக்கு ஒரு மிகச்சிறந்த மழை நாளாக அமைந்தது. இன்று மேலும் பல உள் மாவட்டங்களில் மழை பெய்யும்.

நீண்ட நாட்களாக நீடித்த வரலாற்று சிறப்புமிக்க கடுமையான வெப்பத்திற்கு பிறகு, நேற்று வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருவண்ணாமலை கீழ் பெண்ணாத்தூரில் 122 மி.மீ மழை பதிவாகியிருக்கிறது. இதை தொடர்ந்து ராணிப்பேட்டையின் ஆற்காடு பகுதியிலும், திருவண்ணாமலையின் ஜமுனாமரத்தூர் பகுதியிலும், கள்ளக்குறிச்சியின் வானபுரம் பகுதி, விழுப்புரத்தின் செஞ்சி உள்ளிட்ட பகுதியில் பலத்த மழை பெய்திருக்கிறது.

இன்று வளிமண்டலத்தில் நிலவும் வெப்பம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, உட்புறத் தமிழகத்தின் மிகப்பெரிய பரப்பளவில் பரவலாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று மழை பெய்த மாவட்டங்களுடன் சேர்த்து இன்று..

ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும். இதுபோக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய கடலோர மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இருப்பினும் காற்றோட்டத்தின் திசை மற்றும் வேகம் காரணமாக மேகங்கள் உட்புற மாவட்டங்களிலேயே நிலைபெற்றுவிடுவதால், கடலோர பகுதிகளை நோக்கி நகர்வதில் சிரமம் இருக்கும். மொத்தத்தில் இன்னைக்கு உள் தமிழகத்தில்தான் மழைக்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.