விஜய் தொடங்கிய புதிய கூட்டணி? ராகுல் காந்தி கடும் அதிருப்தி? இப்படி பண்ணுவாருன்னு நினைக்கல?

சென்னை: முதல்வர் விஜய் தலைமையில் அமைந்த புதிய கூட்டணிக் கட்டமைப்பு, டெல்லி காங்கிரஸ் மேலிடத்திலும் தமிழக அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, தனது கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தீவிரமாக இறங்கினார். இதன் தொடர்ச்சியாக, பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் கலந்து கொண்டன. கூட்டத்தின் முடிவில், இந்த அணிக்கு ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி’ என்று அதிகாரப்பூர்வமாகப் பெயர் சூட்டப்பட்டது. மேலும், இந்த கூட்டணிக் கட்டமைப்பின் தலைவராக முதலமைச்சர் விஜய் இருப்பார் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

ஆளும் கூட்டணியை முறைப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட இந்த நகர்வு, தற்போது டெல்லி அரசியலில் ஒரு புதிய புயலைக் கிளப்பியுள்ளது. தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி ‘இந்தியா’ கூட்டணியை வழிநடத்தி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்றுள்ள ஒரு கூட்டணிக்கு, விஜய் தலைமையில் தனியாகப் புதிய பெயரில் ஒரு கூட்டமைப்பை உருவாக்கியது அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“தேசிய அளவில் ஏற்கெனவே இந்தியா கூட்டணி இருக்கும்போது, விஜய் ஏன் அந்தக் கூட்டணியில் இணையவில்லை? அதற்குப் பதிலாகத் தமிழகத்தில் மட்டும் தனியாக ஒரு புதிய கூட்டமைப்பைத் தொடங்க வேண்டிய அவசியம் என்ன?” என்று ராகுல் காந்தி மிகக் கடுமையான கேள்விகளை எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இந்தியா கூட்டணியின் வலிமையைக் குறைப்பது போல இந்தத் தனித்த பிராந்தியக் கூட்டணி அமைந்துவிடக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.

இந்த விவகாரம் சூடுபிடித்ததை அடுத்து, டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் மேலிடத் தலைவர் ஒருவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூரைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது ராகுல் காந்தியின் கோபத்தையும் அதிருப்தியையும் அவர் மாணிக்கம் தாகூரிடம் நேரடியாகத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கு விளக்கம் அளித்த மாணிக்கம் தாகூர், இந்த ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி’ என்பது ஒட்டுமொத்த இந்தியாவிற்கானது அல்ல.. இது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் மற்றும் அரசியல் கட்டமைப்பு மட்டுமே என்று எடுத்துரைத்துள்ளார். மேலும் மகாராஷ்டிராவில் பாஜகவை எதிர்ப்பதற்காக காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து ‘மகா விகாஸ் அகாதி’ என்ற பெயரில் தனி பிராந்தியக் கூட்டணியை அமைத்துச் செயல்பட்டதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதே மாதிரியான ஒரு பிராந்திய ஏற்பாடுதான் இது என்றும் அவர் டெல்லி தலைவர்களிடம் வாதிட்டுள்ளார்.

இருப்பினும், மாணிக்கம் தாகூர் அளித்த இந்த விளக்கத்தால் ராகுல் காந்தி சமாதானம் அடையவில்லை என்றே காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2029 மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து ராகுல் காந்தியைப் பிரதமராக்கும் திட்டத்தில் காங்கிரஸ் தீவிரமாக இருக்கும் சூழலில், தவெக தரப்பில் இருந்து பிரதமர் பதவிக்கான விவாதங்கள் எழுந்து தணிந்த சில நாட்களிலேயே இந்தத் தனி கூட்டணி அறிவிப்பு வந்திருப்பது டெல்லி தலைமையைக் கலக்கமடையச் செய்துள்ளது.

இதற்கிடையே, தமிழகத்திலும் ஒரு புதிய உட்கட்சி சலசலப்பு வெடித்துள்ளது. பனையூர் ஆலோசனைக் கூட்டத்திற்கு முதலமைச்சர் விஜய் தலைமை தாங்கினாலும், கூட்டம் முடிந்த பிறகு கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் முன்னின்று செய்தியாளர்களிடம் கூட்டணிக் கொள்கைகள் மற்றும் பெயரைக் குறித்து விரிவாகப் பேசினார். தொலைக்காட்சிகளிலும் ஊடகங்களிலும் அவரே இந்தக் கூட்டணியின் முக்கிய முகமாக முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இது தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் சுத்தமாகப் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தவெக தலைவர் விஜய் முன்னின்று அமைத்த ஒரு கூட்டணிக்கு, காங்கிரஸ் மாநிலத் தலைவர் முன்னிலை பெற்றுப் பேசியது கூட்டணிக் களத்தில் தவெகவின் முக்கியத்துவத்தைக் குறைப்பது போல் இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர்.

வரவிருக்கும் இடைத்தேர்தல்களை ஒற்றுமையாக எதிர்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்ட ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி’, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட முதல் நாளிலேயே டெல்லி மேலிடத்தின் அதிருப்தி, கூட்டணிக் கட்சிகளுக்குள்ளான அதிகாரப் போட்டி எனப் பல்வேறு குழப்பங்களைச் சந்தித்து வருவது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.