நியூயார்க்: கடலின் ஆழத்தில் மனிதர்களின் கண்களுக்கு எட்டாத பல மர்மங்கள் புதைந்து கிடக்கின்றன. அதிலும் குறிப்பாக, எரிமலைகள் மற்றும் கடலின் அடிப்பகுதி பற்றி ஆராயும்போது விஞ்ஞானிகளுக்கே பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. அந்த வகையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திற்கு அருகில் உள்ள கடலில், விஞ்ஞானிகள் யாரும் எதிர்பாராத விதமாக ஒரு அரிய வகை விநோத கடல் உயிரினத்தைக் கண்டறிந்துள்ளனர்.
இந்தச் செய்தி தற்போது உலகெங்கிலும் உள்ள கடல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கலிபோர்னியா கடற்கரைக்கு அருகே உள்ள கடலில் ‘டேவிட்சன் சீமவுண்ட்’ என்ற பெயரிடப்பட்ட செயலற்ற நீருக்கடியில் உள்ள எரிமலைப் பகுதி அமைந்துள்ளது. இது மொன்டரே பே தேசிய கடல் சரணாலயத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ளது. இங்குதான் மொன்டரே பே அக்குவாரியம் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர்.
ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்ட ‘டேவிட் பாக்கார்ட்’ என்ற கப்பலில் விஞ்ஞானிகள் பயணம் செய்தனர். கடலுக்கு அடியில் என்ன நடக்கிறது என்பதைத் துல்லியமாகப் பார்ப்பதற்காக ‘டாக் ரிக்கிட்ஸ்’ என்ற ரிமோட் மூலம் இயக்கப்படும் ரோபோ கேமராவைப் பயன்படுத்தினர். இந்தக் கேமரா கடலின் மிக ஆழமான பகுதிக்குச் சென்று உயர்தரப் படங்களை அனுப்பிக் கொண்டிருந்தது.
அப்போதுதான் அந்த வியக்கத்தக்க சம்பவம் நிகழ்ந்தது. கடலுக்கு அடியில் சுமார் 10,751 அடி ஆழத்தில், அதாவது சுமார் இரண்டு மைல் ஆழத்தில், ஒரு விநோதமான உயிரினம் நீந்திச் செல்வது கேமராவில் பதிவானது. இந்த ஆய்வுக் குழுவில் இடம்பெற்றிருந்த ஒலிவியா சோவாரெஸ் பெரைரா என்ற இளம் ஆராய்ச்சியாளர் கட்டுப்பாட்டு அறையில் உள்ள திரைகளைக் கண்காணித்துக் கொண்டிருந்தார். அப்போது திரையின் மூலையில் ஏதோ நீண்ட உணர்திறன் கொண்ட பாகம் தெரிவதை அவர் கவனித்தார்.
முதலில் அது ஒரு ஜெல்லி மீன் போல இருப்பதாக அவர் நினைத்தார். ஆனால், சிறிது நேரத்தில் அதன் சிறிய முழங்கைகள் போன்ற பகுதிகள் வெளியே தெரிந்தவுடன், அது ஒரு கணவாய் வகை உயிரினம் என்பதை அவர் உடனடியாகக் கண்டுபிடித்தார். இந்த அரிய வகை உயிரினத்தை ‘பிக்ஃபின் ஸ்கிட்’ என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.
இந்தக் கணவாய் இரண்டு பெரிய துடுப்புகளையும், எட்டு சாதாரண கைகளையும், இரண்டு நீண்ட உணர்திறன் கொண்ட கைகளையும் கொண்டு அழகாக நீந்திச் சென்றது. இதன் தலை முதல் கை வரை சுமார் 4.1 அடி நீளம் இருந்ததாக விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர்.
இந்த ஆய்வில் கலந்துகொண்ட NOAA அமைப்பைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஆண்ட்ரூ டெவோகலேரே கூறுகையில், “நாங்கள் கடலின் அடிமட்டத்தைப் பற்றி கவனித்துக் கொண்டிருந்தபோது, திடீரென இந்த கணவாய் திரையில் தோன்றியது. இது பார்ப்பதற்கு ஒரு தேவதை போல் சிறகுகளுடன் மென்மையாக நீந்திச் சென்றது” என்று வியப்புடன் தெரிவித்தார். மேலும், மொன்டரே பே தேசிய கடல் சரணாலயப் பகுதியில் இந்த வகை பிக்ஃபின் ஸ்கிட் கணவாய் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல் முறை என்றும் அவர் குறிப்பிட்டார்.
விஞ்ஞானிகள் அனைவரும் திமிங்கலங்கள் மற்றும் கடலின் அடிமட்ட மண் எப்படி மாறுகிறது என்பதைப் பற்றி ஆராயச் சென்றபோது, எதிர்பாராத விதமாக இந்த அரிய கடல் வாழ் உயிரினத்தைக் கண்டறிந்தது அவர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசாக அமைந்துள்ளது. ஆழ்கடல் உலகில் இன்னும் மனிதர்களுக்குத் தெரியாத எத்தனையோ ரகசியங்கள் மறைந்துள்ளன என்பதற்கு இந்த நிகழ்வு மற்றொரு சாட்சியாகும்.
