உடல் நலக்குறைவால் அவதி.. சூனியம் வைத்ததாக நினைத்து மருமகளுக்கு முதியவர் கொடுத்த தண்டனை

மும்பை: மகாராஷ்டிராவில் தொடர்ந்து முதியவர் ஒருவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். தனது பிரச்சனைக்கு மருமகள் சூனியம் வைத்தது தான் காரணம் என்று அவர் நினைத்தார். இதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் அந்த முதியவர் தனது மருமகளை கோடரியால் வெட்டி கொன்ற சம்பவம் திடுக்கிட வைத்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர் லட்சுமி ரவிசங்கர் பட்டீல். இவருக்கு வயது 42. இரண்டு குழந்தைகள் உள்ளனர். லட்சுமியின் கணவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனல் அவர் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

இவரது வீட்டில் மாமனாரான 72 வயது நிரம்பிய நாதுலால் பள்ளி தனி அறையில் வசித்து வருகிறார். இந்நிலையில் நாதுலால் பள்ளி மற்றும் மருமகள் லட்சுமி ஆகியோர் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் தான் நேற்று வீட்டு அருகே உள்ள கிணற்றில் லட்சுமி துணிகளுக்கு சோப்பு போட்டு கொண்டிருந்தார். அப்போது லட்சுமிக்கும், மாமனார் நாதுலால் பள்ளிக்கும் பிரச்சனை ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியது. அப்போது ஆத்திரமடைந்த நாதுலால் பள்ளி அருகே இருந்த கோடரியை எடுத்து லட்சுமியின் தலையில் வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் லட்சுமி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதையடுத்து போலீசில் சிக்கி கொள்வோம் என்று நாதுலால் பள்ளி பயந்தார். இதனால் அவர் அருகே உள்ள கிணற்றில் குதித்தார். இதுபற்றி அறிந்த கிராமத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், தீயணைப்பு வீரர்களுடன் வந்து கிணற்றில் குதித்த நாதுலால் பள்ளியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி கொல்லப்பட்ட லட்சுமியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் பற்றி மாமனார் நாதுலால் பள்ளியிடம் விசாரிக்கப்பட்டது. அப்போது அவர் கொலைக்கான காரணம் பற்றி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அந்த வாக்குமூலத்தில், ”எனக்கும், எனது மருமகள் லட்சுமிக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்தது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு எனது மகன் இறந்தான். அதன்பிறகு அடிக்கடி எனக்கு உடல்நல பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தது. இதற்கு சூனியம் வைத்தது தான் காரணம் என்று நினைத்தேன். எனது மகனுக்கும், எனக்கும் மருமகள் லட்சுமி சூனியம் வைத்திருக்கலாம் என்று நினைத்தேன்.

இதனால் தான் மகன் இறந்துவிட்டான். எனக்கு உடல்நல பாதிப்பு ஏற்படுவதாக நினைத்தேன். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வரும். இப்படியாக நடந்த சண்டையில் தான் லட்சுமியை கோடரியால் வெட்டி கொன்றேன். அதன்பிறகு கைது பயத்தில் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றேன்” என்று கூறினார். இதையடுத்து நாதுலால் பள்ளியை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.