திமுக, தவெக ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல.. லண்டனில் கார் ரேஸ்! விஜய்யை விட்டு விளாசிய அதிமுக இன்பதுரை

சென்னை: திமுக கொரோனா என்றால், தவெக உருமாறிய கொரோனா என அதிமுக எம்பி இன்பதுரை விமர்சித்துள்ளார். மேலும், மக்கள் விரோத மனப்பாங்கில் திமுகவும், தவெகவும் ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல என்று பதிவிட்டுள்ள இன்பதுரை, விஜய் கார் ரேசை தொடங்கி வைத்த புகைப்படங்களையும், நடிகை திரிஷாவுடன் ஒரே மாடத்தில் நின்றபடி கார் பந்தயத்தை பார்த்து ரசிக்கும் காட்சிகளையும் பகிர்ந்துள்ளார்.

தமிழக முதல்வர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்றுள்ளார். 6 நாள் பயணமாக லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய், நேற்று லண்டனில் உள்ள சில்வர்ஸ்டோன் சர்கியூட்டில் நடைபெற்ற கார் ரேசை தொடங்கி வைத்தார். இந்த பந்தயத்தில் நடிகர் அஜித்தின் கார் ரேஸ் அணியும் இடம் பெற்றது.

நடிகர் அஜித்தை ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்திய முதல்வர் விஜய், அவருடன் போஸ் கொடுத்தார். தொடர்ந்து கார் ரேசை கண்டு ரசித்தார். அஜித பங்கேற்ற கார் பந்தயத்தை நடிகை திரிஷாவும் கண்டு ரசித்தார். தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதாக கூறினார். ஆனால், முதலீட்டாள்ர்களை சந்தித்ததாக ஒரு செய்தியும் வரவில்லை.. வேறு புகைப்படம்தான் பத்திரிகைகளில் வந்துள்ளது என்று அதிமுக விமர்சித்தது.

அதிமுக எம்பியும் அக்கட்சியின் மூத்த நிர்வாகியுமான இன்பதுரையும் விஜய்யின் வெளிநாட்டு பயணத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். இன்பதுரை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-

முதலீடுகளை ஈர்ப்பதாகக் கூறி, மக்கள் வரிப்பணத்தில் இங்கிலாந்து சென்ற முதல்வர் விஜய் லண்டனில் கார் ரேசை கண்டுகளிப்பது என்பது அன்று மக்கள் வரிப்பணத்தில் திமுக அரசு கார் ரேஸ் நடத்தியதற்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல! மக்கள் விரோத மனப்பாங்கில் திமுகவும், தவெகவும் ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல! திமுக கொரோனா என்றால், தவெக உருமாறிய கொரோனா!” என்று காட்டமாக பதிவிட்டு இருக்கிறார்.

அஜித் களமிறங்கும் கார் பந்தயத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஜோசப் விஜய்.. லண்டனில் முக்கிய நிகழ்வு

இந்த பதிவுடன் விஜய் கார் ரேசை தொடங்கி வைத்த புகைப்படங்களையும் நடிகை திரிஷாவுடன் ஒரே மாடத்தில் நின்றபடி கார் பந்தயத்தை பார்த்து ரசிக்கும் காட்சிகளையும் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக இன்று திருச்சியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய எடப்பாடி பழனிசாமி, “விஜய்யையும், தவெக அரசையும் கடுமையாக விமர்சித்தார். தவெக அரசு மக்களுகு எதுவுமே செய்யாமல் ஆட்சிக்கு வந்துள்ளது. அதிமுக எம்.எல்.ஏக்களை சாலையில் விளையாடும் குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து அழைத்து செல்வது போல் அழைத்து சென்றுள்ளார்கள். குதிரை பேரம் மூலம் விலை பேசி அதிமுக ராஜினாமா செய்ய வைத்துள்ளது. தவெக ஆட்சி சொந்தக்காலில் நிற்கவில்லை இரவல் காலில் நிற்கிறது” என்றார்.

விஜய், அஜித்தை சந்திப்பாரா விராட் கோலி.. லண்டனில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. முதல்வர் விஜய் லண்டனில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக எந்த புகைப்படமும் இதுவரை வரவில்லை. தொழில் முதலீட்டை எப்படி ஈர்க்கிறார் என்று மக்களே பார்த்து தெரிந்து கொள்வார்கள். தவெக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. தவெக ஆட்சியில் மின்வெட்டு மிக மோசமாக உள்ளது. மிக கடுமையான மின்வெட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. எந்த கேள்விகளுக்கும் பதில் கிடைக்கவில்லை. இந்த ஆட்சி போராட்டத்தை மட்டும்தான் சந்தித்துக்கொண்டு இருக்கிறது” என்றார்.