வாஷிங்டன்: ஐடி துறையில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக செயல்பட்டு வரும் ஆரக்கிள் (Oracle) நிறுவனம் திடீரென்று தனது ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. 2 நாள் விடுமுறையை முடித்து நேற்று பணியை தொடங்கிய ஊழியர்களுக்கு ‘இன்று தான் உங்களின் கடைசி வேலைநாள்’ என்று பணி நீக்கம் தொடர்பான இ-மெயிலை அனுப்பி அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.
ஆரக்கிள் என்பது அமெரிக்காவை சேர்ந்த மல்டிநேஷனல் டெக்னாலஜி கம்பெனியாகும்.
இந்த நிறுவனம் சார்பில் டேட்டாபேஸ் சாப்ட்டேர், என்டர்பிரைஸ் அப்ளிகேஷன், கிளவுட் இன்ஃப்ராஸ்ட்ரெக்ச்சர் மற்றும் ஹார்ட்வேர் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. இதுதவிர ஐடி துறையில் இன்னும் பல சேவைகளை ஆரக்கிள் நிறுவனம் வழங்கி வருகிறது.
அமெரிக்காவின் டெக்ஸாஸில் உள்ள ஆஸ்டினை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது . இந்த நிறுவனத்தின் தலைவராக லாரி எல்லிசன் உள்ளார். இந்தியா உள்பட பல நாடுகளில் ஆரக்கிள் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நம் நாட்டில் சென்னை, பெங்களூர், ஹைதரபாாத், மும்பை, டெல்லி, புனே உள்பட பல முக்கிய நகரங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் 2 நாள் விடுமுறையை முடித்து நேற்று காலையில் வழக்கம்போல் ஆரக்கிள் நிறுவனத்திற்கு பணிக்கு ஊழியர்கள் சென்றனர். அப்போது ஊழியர்களில் ஒரு பகுதியினருக்கு அதிர்ச்சி வைத்தியம் காத்திருந்தது. அந்த நிறுவனம் சார்பில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இ-மெயில் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. அந்த இ-மெயிலில், ”இன்று தான் உங்களின் கடைசி பணி நாள். உங்களின் பணி தொடர்பான கடினமான தகவலை நாங்கள் பகிர்ந்து கொள்ள போகிறோம்.
ஆரக்கிள் தற்போதைய வணிக தேவைகளை உன்னிப்பாக பரிசீலித்த பிறகு நிறுவனத்தில் பெரிய அளவில் மாற்றம் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக உங்களை வேலையில் இருந்து நிறுத்த முடிவெடுத்துள்ளோம். இதனால் இன்று தான் உங்களின்கடைசி பணி நாளாகும்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த இ-மெயிலை பார்த்து பல ஊழியர்களும் கண்ணீர் சிந்தினர்.
இருப்பினும் வேலையை விட்டு தூக்கியதற்கான சரியான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதேபோல் எத்தனை பேரை மொத்தமாக வேலையில் இருந்து நீக்கினோம் என்பது பற்றியும் ஆரக்கிள் நிறுவனம் தெரிவிக்கவில்லை. பொதுவாக பெரிய பெரிய நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை குறைக்கும்போதும் அதுபற்றி முன்கூட்டியே அறிவிப்பு செய்யும். ஆனால் ஆரக்கிள் தற்போதைய பணி நீக்கம் தொடர்பாக எதுவும் தெரிவிக்காமல் சைலன்ட்டாக ஊழியர்களை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பி உள்ளது.
இருப்பினும் ஆரக்கிள் இப்படி ஊழியர்களை திடீரென வேலையை விட்டு அனுப்புவது ஒன்றும் புதிது அல்ல. கடந்த மே மாதம் 31ம் தேதி ஆரக்கிள் மொத்தம் 21 ஆயிரம் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியது. ஏஐ தொழில்நுட்பத்தால் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இப்போது எந்த முன்னறிவிப்பும் இன்றி ஆரக்கிள் தனது ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
