“கடமை-கண்ணியம்-கட்டுப்பாட்டை நெஞ்சில் ஏந்துவோம்”-முதல்வர் விஜய் பதிவு

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 118 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், ‘தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கி, ஏழை எளிய மக்களின் உரிமைகளுக்காகக்  குரல் கொடுத்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில், அவரது தொலைநோக்குப்பார்வையையும், மக்கள் சேவையையும் நெஞ்சார நினைவுகூர்ந்து போற்றுகிறேன்.

எழுச்சியூட்டும் மேடைப் பேச்சாலும், கூர்மையான எழுத்தாற்றலாலும் மக்கள் மனங்களைக் கவர்ந்து, அவர்களின் பேராதரவோடு ஆட்சிப்பொறுப்பேற்று, தமிழ் மொழி மீது கொண்ட அளவற்ற பற்றால் நம் மாநிலத்திற்கு “தமிழ்நாடு” எனப் பெயர் சூட்டி, மாநில சுயாட்சிக்கு வித்திட்டு, சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கி தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

“கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு”, “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” போன்ற அவரது உயரிய முழக்கங்களை நெஞ்சில் ஏந்தி, சமூகநீதியும், சமத்துவமும், சகோதரத்துவமும் எங்கும் தழைத்தோங்கிடவும், தமிழின் பெருமையைக் காத்திடவும் இந்நாளில் உறுதியேற்போம்’ என தெரிவித்துள்ளார்.

Source link