பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் வந்தால்.. தென்சென்னைக்கான ஆஸ்பத்திரியாக மாறும்! ஜெயக்குமார் ஆவேசம்

சென்னை: பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டியே தீருவேன் என்று முதல்வர் நினைத்தால், மக்கள் விட மாட்டார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மீன்வர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கி அங்கு தலைமைச் செயலகம் கட்டுவதை அனுமதிக்க முடியாது என்று கூறிய ஜெயக்குமார், பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைந்தால் பல்வேறு கட்டுப்பாடுகள் அப்பகுதி மக்களுக்கு விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி அவரின் சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது பட்டினப்பாக்கத்தில் அமையவுள்ள தலைமைச் செயலகத்திற்கு மீனவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு ஜெயக்குமார் பேசுகையில், 25 ஏக்கர் அந்த நிலம்.. அது எற்கனவே மண்ணின் மைந்தவர்களாக இருக்கும் மீனவர்களுக்கு சொந்தம்.. ஆதிகாலம் தொட்டு பார்த்தால், சென்னையே ஒரு மீனவர் குப்பம் தான். தற்போது சென்னை காஸ்மோபொலிட்டன் நகரமாக மாறிவிட்டது. 9 மீனவர் கிராமங்களில் சுமார் 3 ஆயிரம் மீன்பிடி கலங்கள் இருக்கின்றன. அவர்களின் வாழ்வாதாரம் மிக முக்கியம்.

சாந்தோம் அருகில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் இதனால் அதிக போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது. பல பள்ளிக் கூடங்களில் நல்ல தண்ணீர் கிடைப்பதில்லை. நாடாளுமன்றமே ரூ.900 கோடி கட்டியுள்ள போது, தலைமைச் செயலகத்தை ரூ.1,200 கோடி ஒதுக்கி இருக்கிறர்கள். மக்களின் வரிப்பணம் இது.

பட்டினப்பாக்கம் பகுதியில் தலைமைச் செயலகம் அமைந்தால், லைட் ஹவுஸ் அருகிலேயே பேரிகார்டுகள் போடப்படும். என் வீடு அருகில் இருப்பதால், நானே அங்கு பாஸ் வாங்கிவிட்டு தான் செல்ல வேண்டிய நிலை உருவாகும். தலைமைச் செயலகத்தை பட்டினப்பாக்கத்தில் அமைக்க வேண்டிய அவசியம் என்ன? முட்டாள்தனமாக முடிவை தமிழக அரசு எடுத்திருக்கிறது. அதிகாரிகள் சொன்னாலும் முதல்வர் யோசிக்க வேண்டும்.

தலைமைச் செயலகம் அமைந்தால், அப்பகுதி மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதனை மீறி கட்டியே தீருவேன் என்று முதல்வர் நினைத்தால், மக்கள் விடமாட்டார்கள். சென்னைக்கு வெளியே ஒரு துணை கோள் நகரம் அமைத்து அங்கு தலைமைச் செயலகம் கட்டலாமே? மீனவர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கி அங்கு தலைமைச் செயலகம் கட்டுவதை அனுமதிக்க முடியாது.

எல்லாத்தையும் மீறி பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டினால், தென் சென்னைக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக அது மாறக் கூடும் என்று தெரிவித்தார். இதன் மூலமாக திமுக ஆட்சியில் 2011ல் கட்டப்பட்ட ஓமந்தூரார் தலைமைச் செயலகம், மருத்துவமனையாக மாற்றப்பட்டதை மறைமுகமாக சுட்டிக்காட்டி ஜெயக்குமார் பேசி இருப்பதாக பார்க்கப்படுகிறது.