சென்னை: திமுகவினரின் பேச்சு அவர்களுக்கு பலவீனத்தைத் தரும் என்று விசிக பொதுச் செயலாளர் திருமாவளவன் பேசியிருந்தார். இதுதொடர்பான கேள்விக்கு, திமுகவில் யார் பேசினாலும், என்ன தவறு செய்தாலும் அதை கண்டிக்கும் தலைவர் எங்கள் தலைவர் என்றும், திருமாவளவனின் அறிவுரையை தாங்கள் ஏற்கிறோம் என்றும் மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளர் பரந்தாமன் தெரிவித்துள்ளார். மேலும், வரும் தேர்தலில் மதுராந்தகத்தில் வெற்றி திமுகவுக்கு தான் என்ற செய்தியையும் அவர் விரைவில் அறிவார் என்று கூறினார்.
தமிழகத்தில் மதுராந்தகம், தாரபுரம் தொகுதிக்கு அக்டோபர் 9 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. திமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் சட்டத் துறை இணை செயலாளர் பரந்தாமன் போட்டியிடவுள்ளார். இந்நிலையில், அண்ணா பிறந்த நாளையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள அறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் அவரது திருவுருவச் சிலை முன்பு வேட்புமனு விண்ணப்பத்தை வைத்தும், மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து, திமுக வேட்பாளர் பரந்தாமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அண்ணா பிறந்த நாளையொட்டி, அவரது நினைவு இல்லத்தில் மாலை அணிவித்து, என்னுடைய வேட்பு மனுவை அவரிடம் வைத்து வாழ்த்து பெற்று தாக்கல் செய்வது பெரும் பாக்கியம் என்று கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.
கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கேள்விக்கு, அதை அவர்கள்தான் தெளிவுபடுத்த வேண்டும். நிறுத்துவது கம்யூனிஸ்ட் ஆனால் தவெகவுக்கு ஆதரவு என்றால் என்ன நிலைப்பாடு எடுக்கிறார்கள் என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும். மக்கள் தெளிவான முடிவை எடுத்திருக்கிறார்கள். மதுராந்தகம் மக்கள் மீண்டும் இந்த தவறை செய்ய மாட்டார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகம் தான் வெற்றி பெற வேண்டும் என்பதில் முடிவோடு இருக்கிறார்கள். தவெக கூட்டணி வெற்றி பெறும் என திருமாவளவன் கூறியது குறித்த கேள்விக்கு, கூட்டணியின் பெயரில் மட்டும்தான் வெற்றி உள்ளது. ஆனால், அக்டோபர் 9 ஆம் தேதியின் வெற்றி திமுகவுக்கு தான் என்பதை திருமாவளவனே தெரிந்து கொள்வார்.
திமுகவில் யார் பேசினாலும், என்ன தவறு செய்தாலும் அதை கண்டிக்கும் தலைவர் எங்களது தலைவர். அரசியல் மாண்பையும், நாகரீகத்தையும் நிச்சயமாக கடைப்பிடிப்போம். திருமாவளவனின் அறிவுரையை தாங்கள் ஏற்கிறோம்.
திமுக அரசியல், தேர்தல் வரலாற்றில் எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோதே இடைத்தேர்தலில் கருணாநிதி வெற்றி பெற்றாரோ அதே போல மதுராந்தகம் தொகுதியிலும் திமுக வெற்றி பெறும். இடைத்தேர்தல் வரலாறுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது என்று கூறினார்.
