பணத்தேவை காரணமாக தென்னிந்திய திரைப்படங்களில் நடித்த போது கடும் பாலியல் பாகுபாட்டை சந்தித்ததாகவும் அவர் பேசியிருக்கிறார்.

நடிகை ராதிகா ஆப்தே நடித்திருக்கும் “ராத் அகேலி ஹை: தி பன்சால் மர்டர்ஸ்’ என்ற திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேற்றைய தினம் வெளியாகியிருக்கிறது.
இப்படத்திற்காக அளித்த நேர்காணல்களில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்து வருகிறார்.

அதில் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பாலிவுட்டில் உள்ள டாக்சிக் சூழலை உணர்ந்து பல பெரிய வாய்ப்புகளை நிராகரித்ததாகவும், பணத்தேவை காரணமாக தென்னிந்திய திரைப்படங்களில் நடித்த போது கடும் பாலியல் பாகுபாட்டை சந்தித்ததாகவும் அவர் பேசியிருக்கிறார்.
அந்தப் பேட்டியில் பாலிவுட் பற்றி ராதிகா ஆப்தே பேசுகையில், “சில பெரிய நட்சத்திரங்களுடன் பணியாற்றும் போது அவர்களின் உண்மை முகத்தை உணர்ந்தேன்.
அவர்கள் மோசமானவர்கள் என்பதைத் தெரிந்துகொண்டேன். அதிலிருந்து அவர்களுடன் இனி ஒருபோதும் பணியாற்ற மாட்டேன் என முடிவு செய்தேன்.
அவர்களின் பெயர்களைச் சொன்னால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். பின்னர், கடும் பண நெருக்கடியில் இருந்த போது தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்கச் சென்றேன். அங்கும் மோசமான அனுபவங்களைச் சந்தித்தேன்.

எனக்கு உண்மையிலேயே அப்போது பணம் தேவைப்பட்டது. தென்னிந்தியப் படத்திற்காகச் சென்றிருந்தபோது ஒரு முறை சிறிய ஊரில் படப்பிடிப்பு நடந்தது. அந்த செட்டில் நான் மட்டுமே பெண்.
அவர்கள் செய்யச் சொன்ன விஷயங்கள் எனக்கு வருத்தத்தைக் கொடுத்தது. எனக்கு மேனேஜர் இல்லை, ஏஜெண்ட் இல்லை. என் டீம் முழுவதும் ஆண்களே இருந்தனர். பெண்கள் இல்லாத அந்தச் சூழலில் அவர்கள் என்னை அப்படிச் செய்யச் சொன்னது உச்சக்கட்ட பாகுபாடு.
நான் வழக்கமாக தைரியமானவள். ஆனால் அந்த நாட்களை நினைத்தாலே இதயம் படபடக்கிறது. மீண்டும் அந்தச் சூழலில் இருந்தால் அழுது விடுவேன். எந்தப் பெண்ணும் அந்த நிலைக்கு ஆளாகக்கூடாது.” எனக் கூறினார்.
