லக்னோ: காங்கிரஸ் எம்.பி., ராகுலின் இரட்டை குடியுரிமை விவகாரம் தொடர்பாக எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய பிறப்பித்த வாய்மொழி உத்தரவை, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உள்ளது.
காங்கிரஸ் எம்.பி., ராகுலுக்கு நம் நாட்டிலும், ஐரோப்பிய நாடான பிரிட்டனிலும் குடியுரிமை உள்ளதாக கடந்த 2019ல் குற்றச்சாட்டு எழுந்தது.
அதில், ‘பிரிட்டனின் தலைநகரான லண்டனைச் சேர்ந்த ‘பேக்ஆப்ஸ் லிமிடெட்’ நிறுவனத்தின் இயக்குநராக இருந்தபோது, 2005 – 06ல் தாக்கல் செய்யப்பட்ட ஆண்டறிக்கைகளில், ராகுல் தன் பிரிட்டன் குடியுரிமையை வெளிப்படுத்தி உள்ளார்’ என தெரிவிக்கப் பட்டது.
இதையடுத்து, ராகுலின் பதவியை பறிக்கக் கோரி கர்நாடகாவைச் சேர்ந்த பா.ஜ., நிர்வாகி விக்னேஷ் சிஷிர், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, அலகாபாத் உயர் நீதிமன்ற லக்னோ கிளையில் நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘ராகுல் மீது உத்தர பிரதேச போலீசார் உடனடியாக எப்.ஐ.ஆர்., பதிவு செய்யலாம். வழக்கை சி.பி.ஐ., உள்ளிட்ட பிற மத்திய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கலாம்’ என உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், ராகுலுக்கு எதிராக எப்.ஐ.ஆர்., பதிவு செய்யலாம் என்ற முந்தைய வாய்மொழி உத்தரவை, அலகாபாத் உயர் நீதிமன்ற லக்னோ கிளை நேற்று திடீரென நிறுத்தியது.
இதுகுறித்து நேற்று பிறப்பித்த உத்தரவு:
குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு முன் அறிவிப்பு தரும் வகையில், அவருக்கு முறையாக நோட்டீஸ் வழங்கப்பட வேண்டுமா என்பது குறித்து சட்ட ரீதியாக ஆய்வு நடத்துவது அவசியம் என நீதிமன்றம் கருதுகிறது.
விசாரணையின் போது எந்தவொரு வழக்கறிஞரும் முன்னறிவிப்பு வழங்க வேண்டிய சட்டத் தேவையை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரவில்லை.
எனவே, உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றி, ஏப்., 20-ம் தேதி அன்று இதுகுறித்து மீண்டும் விசாரணை நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்தே, நேற்று முன்தினம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அதிரடியாக நிறுத்தப்பட்டது. இதனால், ராகுலுக்கு இடைக்காலமாக நிவாரணம் கிடைத்துள்ளது.
