புதுடில்லி:காரில் அமர்ந்து, மது குடித்ததை தட்டிக் கேட்ட ராணுவ பிரிகேடியர் மற்றும் அவரின் மகனை தாக்கியதாக, மேலும் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தென் மேற்கு டில்லி மாவட்டத்தில் உள்ள வசந்த் என்கிளேவ் என்ற இடத்தில் கோடீஸ்வரர்கள் தான் வசிக்கின்றனர். அந்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வசிக்கும் ராணுவ பிரிகேடியர் மற்றும் ஐ.ஐ.டி., பட்டதாரியான அவரின் மகன், கடந்த, 11ம் தேதி காரில் அமர்ந்து மது அருந்திய இருவரை தட்டிக் கேட்டனர்.
அங்கிருந்து சென்ற அந்த இருவரும், ஹுண்டாய் ஆரா காரில், நான்கு பேரை அழைத்து வந்து, அந்த ராணுவ பிரிகேடியர் மற்றும் அவரது மகனிடம் தகராறு செய்து, அவர்கள் இருவரையும் தாக்கினர். அதை தடுத்த, அந்த ராணுவ அதிகாரியின் மனைவியை மிரட்டினர்.
இந்த விவகாரம் தொடர்பாக, டில்லி போலீசுக்கு கடிதம் வழங்கிய கவர்னர் தரண்ஜித் சிங் சாந்து, ராணுவ அதிகாரி மற்றும் அவரின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட்டு, இந்த விவகாரத்தை விசாரிக்கவும் உத்தரவிட்டார்.
அதையடுத்து, சுறுசுறுப்படைந்த போலீசார், காரில் அமர்ந்து மது அருந்திய இருவரை கைது செய்தனர். விமான நிறுவனம் ஒன்றின் இயக்குனர் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்களான அவர்கள் அமர்ந்து, மது அருந்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், சுர்ஜித் சிங், 36, சுனில் சர்மா, 53, ஆஷிஷ், 32, சதேந்தர், 43, என்ற நபர்களை கைது செய்தனர். அவர்கள் பயணம் செய்த ஹுண்டாய் அரா காரையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
