அடல் பென்சன் யோஜனா திட்டம் என்பது வயதான காலத்தில் மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கும் ஒரு அரசுத் திட்டமாகும். இத்திட்டம் குறிப்பாக ஏழைகள், குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள் மற்றும் அமைப்புசாரா துறையில் பணிபுரிபவர்களுக்காகத் தொடங்கப்பட்டது. 18 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் இதில் இணையலாம். இருப்பினும், சில தகுதி வரம்புகள் உள்ளன. வங்கி அல்லது அஞ்சல் அலுவலகம் மூலம் அடல் பென்சன் யோஜனா கணக்கை நீங்கள் தொடங்கலாம். உங்களிடம் ஆதார் இணைப்புடன் கூடிய சேமிப்புக் கணக்கு இருந்தால் அதன் மூலமாகவே இத்திட்டத்தில் இணையலாம்.
உங்களிடம் வங்கி அல்லது அஞ்சல் அலுவலகக் கணக்கு இல்லையென்றால், நீங்கள் ஒரு புதிய கணக்கைத் தொடங்கி, ஆதார் KYC நடைமுறையை முடிக்க வேண்டும். அதன் பிறகு, அடல் பென்சன் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் வயதான பிறகு உங்களுக்கு எவ்வளவு ஓய்வூதியம் தேவை என்பதை முன்கூட்டியே தீர்மானிக்க வேண்டும். இத்திட்டம் ரூ. 1,000, ரூ. 2,000, ரூ. 3,000, ரூ. 4,000 அல்லது ரூ. 5,000 ஆகிய தொகைகளில் உத்தரவாதமான குறைந்தபட்ச மாத ஓய்வூதியத் தேர்வுகளை வழங்குகிறது. உங்களுக்குக் கிடைக்கும் ஓய்வூதியத் தொகை உங்கள் வயது மற்றும் இத்திட்டத்திற்கு நீங்கள் செலுத்தும் பங்களிப்பு ஆகியவற்றைப் பொறுத்து அமையும். அதாவது, இத்திட்டத்தில் எவ்வளவு சீக்கிரம் இணைகிறீர்களோ அவ்வளவு எளிதாக உங்கள் பங்களிப்புக்கு ஏற்ற ஓய்வூதியத் தேர்வை மேற்கொள்ள முடியும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி?
உங்கள் வங்கி நெட் பேங்கிங் மூலம் அடல் பென்சன் யோஜனா பதிவு வசதியை வழங்கினால் வீட்டிலிருந்தபடியே நீங்கள் விண்ணப்பிக்கலாம். உங்கள் வங்கியின் இணையதளம் அல்லது நெட் பேங்கிங் தளத்தில் APY விருப்பத்தைத் தேடி, தேவையான விவரங்களை நிரப்ப வேண்டும். அதன் பிறகு ஆட்டோ டெபிட் வசதியைச் செயல்படுத்தலாம். இது குறிப்பிட்ட கால இடைவெளியில் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து நிர்ணயிக்கப்பட்ட தொகையைத் தானாகவே எடுத்துக்கொள்ளும்.
நேரடியாக விண்ணப்பிக்கும் முறை!
இத்திட்டத்தில் நேரடியாக விண்ணப்பிக்க, நீங்கள் உங்கள் வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும். APY படிவத்தைப் பெற்று அதில் தேவையான விவரங்களை நிரப்ப வேண்டும். உங்கள் ஆதார் அட்டை மற்றும் தேவையான KYC ஆவணங்களின் நகல்களைச் சமர்ப்பிக்க வேண்டும். படிவத்தைச் சமர்ப்பித்ததும் ங்கி உங்களுக்கு ஒரு ரசீதை வழங்கும். விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதும், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வரும்.
60 வயதிற்குப் பிறகு எவ்வாறு ஓய்வூதியம் கிடைக்கும்?
அடல் பென்சன் யோஜனா திட்டத்தின் காலம் பொதுவாக 60 வயது வரை நீடிக்கும். 60 வயதை அடைந்த பிறகு திட்டத்தின் விதிகளின்படி, திரட்டப்பட்ட தொகையிலிருந்து ஓய்வூதியம் வரத் தொடங்கும். ஓய்வூதியத்தைப் பெற நீங்கள் உங்கள் வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தில் அதற்கான கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். செயல்முறை முடிந்ததும் மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்படும். சந்தாதாரர் இறக்கும் பட்சத்தில் விதிகளின்படி அவரது வாழ்க்கைத் துணை ஓய்வூதியத்தைப் பெறலாம்.
60 வயதிற்கு முன்பே பணத்தை எடுக்க முடியுமா?
இத்திட்டத்தில் பொதுவாக முன்கூட்டியே பணத்தை எடுக்கும் வசதி இல்லை. சந்தாதாரரின் இறப்பு அல்லது தீவிர நோய்க்கான சிகிச்சை போன்ற குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டுமே இது சாத்தியமாகும். 60 வயதிற்கு முன் கணக்கு மூடப்பட்டால் செலுத்தப்பட்ட சந்தா தொகையும் அதற்கான வட்டியும் திரும்ப வழங்கப்படும். ஆனால், அரசின் பங்களிப்புத் தொகை மற்றும் அந்தப் பங்களிப்பின் மீதான வட்டி ஆகியவை வழங்கப்படாது. எனவே, அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் சேர்வதற்கு முன் அதன் விதிகளைப் புரிந்துகொள்வது அவசியம். முடிந்தவரையில் 60 வயது வரை இத்திட்டத்தைத் தொடர்வது பயனளிப்பதாக இருக்கும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Source link
